ஆமிர்கான் எப்போதுமே பிரதமர் மோடிக்கு எதிரானவர் தான்! இல.கணேசன் பேட்டி
ஈரோடு: ஹந்தி நடிகர் ஆமிர்கான் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர் தான் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.
ஈரோடு சூரம்பட்டியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில், இந்தியா எப்போதுமே சகிப்புத் தன்மை கொண்ட நாடு தான். இங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும் சகிப்புத்தன்மை உடையவர்கள் தான்.
ஹிந்தி திரைப்பட நடிகர் ஆமிர் கானின் செயல்பாட்டை ஆரம்பம் முதல் உற்றுப் பார்த்தால் அவர் எப்போதுமே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரானவர் தான் என்பது புரியும். பிரதமராக மோடி பதவியேற்றதை சகித்துகொள்ள முடியாதவர்கள் சகிப்புத்தன்மையின்றி இதுபோன்று அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் இருந்த கட்சிகளில் மதிமுகவை தவிர்த்து பிற கட்சிகள் அனைத்தும் எங்களுடன் தான் இருக்கின்றன. அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
பாமக எப்போதுமே வேகமாக செயல்படும் நடைமுறை கொண்ட கட்சி. மக்களவைத் தேர்தலின்போதும் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து பாமக, தேமுதிக பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். ஆனால், அதற்கு பின்னர் தங்களது வேட்பாளர்களை திரும்பப்பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்டனர்.
பாமக வேகமாக செயல்படும் கட்சியாக இருந்தாலும் விவேகமாகவும் செயல்படும் கட்சியாக இருந்து வருகிறது. எனவே, தேர்தல் நேரத்தில் விவேகமான முடிவை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. முதல்வர் வேட்பாளரை அறிவிக்க இது தகுந்த நேரம் இல்லை. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப்பின் முதல்வர் வேட்பாளரை அறிவித்தால் போதுமானது.
வாஜ்பாய் ஆட்சியில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதுபோன்ற வளர்ச்சிப் பணிகள் மோடி ஆட்சியிலும் தொடர்கின்றன. அதுபோன்ற ஆட்சிகளை ஒப்பிடும்போது தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி, நல்லாட்சி என்று என்னால் கூற முடியாது என்றார் கணேசன்.