ஆனி திருமஞ்சனம்: சிதம்பரம் நடராஜர் ஆலய தேரோட்டம் கோலாகலம்
சிதம்பரம்: சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆடல்வல்லான் என்று போற்றப்படும் நடராஜரின் உற்சவத் திருமேனியும் திருத்தேரும் ஆடியாடி அசைந்து வர, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில், ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வந்தது. பின்னர், தங்க கைலாச வாகனத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா வந்த காட்சியை பக்தர்களை தரிசித்தனர். இதையடுத்து மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனித்திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் இன்று 9ம் தேதி காலை விமரிசையாக நடைபெறுகிறது. திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம் எனும் கோஷங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
இதில், சித் சபையில் வீற்றுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்ஸவ மூர்த்திகளான விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித் தனித் தேர்களில் வீதியுலா வந்தார்கள்.
இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. நாளை 10ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
இதையடுத்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 11ம் தேதி பஞ்ச மூர்த்திகளின் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.