மக்கள் நலக் கூட்டணியில் இணைகிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, மக்கள் நலக் கூட்டணியில் இணைகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலையும் வைகோ தலைமையிலான கூட்டணியின் கீழ் சந்திக்கவுள்ளது.
தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தர ஆரம்பித்துள்ளனர். மேலும் இக்கூட்டணியின் பிரசாரமும் தொடங்கி விட்டது.
இக்கூட்டணியின் தலைவர்கள் போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் வருகிறது. மக்களிடையேயும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.
தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் இக்கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடந்த வருகின்றன. இந்த நிலையில் இக்கூட்டணியில் ஆம் ஆத்மி இணையவுள்ளது.
கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கட்சி. தற்போது அது மக்கள் நலக் கூட்டணியில் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
டெல்லியிலிருந்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சு நடத்த ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பாரதி வந்துள்ளார். இன்று அவர் வைகோவை சந்தித்துப் பேசவுள்ளார்.
தற்போது மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.