பிக்பாஸ் தமிழ் பட்டத்தை வென்றெடுத்த ஆரவ்!
பிக்பாஸ் டைட்டில் வென்றுள்ள ஆரவ் அடுத்து ஒரு திரைப்படம் மூலமோ, நிகழ்ச்சி மூலமோ மீண்டும் ரசிர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சென்னை : பிக்பாஸ் டைட்டிலை வென்றுள்ள ஆரவ் அடுத்து திரைப்படம் அல்லது நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
மே மாதம் தொடங்கி 100 நாட்கள் நடைபெற்ற தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகள், அழுகை, மகிழ்ச்சி, எரிச்சல் என்று மெகா சீரியல் போல அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இருந்தது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் நடைபெற்ற நிலையில் கிராண்ட் பினாலே செப்டம்பர் 30ல் நடைபெற்றது.
பிக்பாஸ் டைட்டிலை யார் வெல்லப் போகிறார் என்று அனைவரும் உற்று நோக்கி இருந்தனர். பெரும்பாலும் சினேகனுக்கே பிக்பாஸ் பட்டம் கிடைக்கும் என்பது போல நிகழ்ச்சி கொண்டு செல்லப்பட்ட நிலையில் இறுதியில் சினேகன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, ஆரவ் டைட்டிலை வென்றார்.
பாராட்டுகள்
இதனையடுத்து ஆரவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் முதல்முறையாக முகநூல் பக்கத்தில் நேரலையில் வந்து தனது பிக் பாஸ் அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் ஆரவ்.
சாதாரண நடிகர்
அதில் அவர் கூறியிருப்பதாவது : எனக்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்பு இது. ஒரே ஒரு படம் மட்டுமே நடித்திருந்தேன், இன்னொரு படம் நடிக்க இருந்தேன். ஒரு சாதாரண ஆளான எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
மறக்க முடியாத அனுபவம்
என்ன நிகழ்ச்சி என்றெல்லாம் எனக்கு தெரியாது, கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் விஜய் டிவி தரும் வாய்ப்பு என்பதால் ஏற்றுக் கொண்டேன். பிக்பாஸில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம். நிறைய கற்றுக் கொண்டேன்.
சுயதேடல்
நமக்குள்ளான சுயதேடல் அதிகம் கிடைத்தது பிக்பாஸில். 19 போட்டியாளர்கள் விதவிதமான கேரக்டர்களுடன் வந்திருந்தனர், அவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.
100வது நாளில்
இது எல்லாவற்றையும் தாண்டி மக்கள் என்னை நூறாவது நாள் நோக்கி கரை ஒதுக்கி கொண்டுவந்துவிட்டார்கள். மக்களுக்கு மிகவும் நன்றி, எனக்கு ஏகப்பட்ட பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளை கூறுகின்றனர்.
விரைவில் படத்தில்
உங்களுடைய அன்புக்கு மிக்க நன்றி. உங்களைப் போலவே பிக்பாஸ் வீட்டை நானும் மிஸ் பண்ணுகிறேன். மிகவிரைவில் படம் மூலமோ, வேறு ஒரு நிகழ்ச்சி மூலமோ உங்களைச் சந்திக்கிறேன், என்று ஆரவ் கூறியுள்ளார்.