ஈஷா மீதான அடுக்கடுக்கான புகார்கள்... சகாயம் ஐஏஎஸ் விசாரிக்க கோவை கலெக்டரிடம் மனு!
கோவை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீதான அடுக்கடுக்கான புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் ஆதித் தமிழர் கட்சியினர் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஈஷா யோகா மையம் சர்ச்சைகளின் சங்கமமாக இருக்கிறது... மகள்களை, மகனை கட்டாயப்படுத்தி அடைத்து வைத்து சன்னியாசியாக்கிவிட்டது என்ற புகார் அடுத்தடுத்து சுழன்றடிக்கிறது.
அதேபோல் பிஞ்சு குழந்தைகளை பைத்தியமாக்குகிறார்கள்; சேவா தண்டனை என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள் என ஏகத்துக்கும் வரிசைகட்டி வருகிறது புகார்கள். இத்தனை புகார்களுக்கும் சளைக்காமல் ஈஷா யோகா மையமும் பதிலளித்து வருகிறது.
தூத்துக்குடி பெற்றோர்..
இந்த நிலையில் கோவை ஆட்சியர் அலுவலகம் ஈஷா யோகா மைய விவகாரங்களால் பரபரப்பாக காணப்பட்டது. தூத்துக்குடியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஈஷாவில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மகனை மீட்டுத் தரக் கோரி ஆட்சியர் ஹரிகரனிடம் மனு கொடுத்தார்.
ஜக்கி ஆதரவாளர்கள்
அதேபோல் ஈஷா யோகா மையம் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்கள் புகார் கொடுத்தனர். பின்னர் ஆதித் தமிழர் கட்சியினர் சார்பில் ஒரு மனு ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.
சகாயம் விசாரிக்க மனு
அதில், ஈஷா யோகா மையம் மீதான புகார்களை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. அத்துடன் ஈஷாவில் உள்ள பணியாளர்கள், சன்னியாசிகள் நிலைமை குறித்து ஆராயவும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
வெள்ளை அறிக்கை
மேலும் ஈஷா யோகா மையத்துக்கான நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்க வேண்டும். அது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த மனுவில் ஆதித் தமிழர் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் எத்தனையோ!