மழைநீரை அகற்ற கோரி ஆவடி கவுன்சிலரின் கணவர் நகராட்சி அலுவலகம் முன்பு நூதன போராட்டம்
ஆவடி: சென்னை ஆவடியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க கவுன்சிலரின் கணவர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி நகராட்சிக்குட்பட்ட 34 ஆவது வார்டு அ.தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் மாலா. இவருடைய வீடு ஆவடி காந்திநகர் இம்மானுவேல் தெருவில் உள்ளது.
இவரின் வீட்டுத் தெருவில் கன மழையால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி கவுன்சிலர் மாலாவிடம் முறையிட்டனர். இது குறித்து மாலாவின் கணவர் ரமேஷ் ஆவடி நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
ஆனால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த ரமேஷ் மழைநீரை அகற்ற வலியுறுத்தி நேற்று தன் நண்பர் பாலமுருகனுடன் பாய், தலையணையை எடுத்துக்கொண்டு ஆவடி நகராட்சிக்கு வந்தார். நகராட்சி நுழைவு வாயிலில் தரையில் பாயை விரித்து இருவரும் படுத்துக்கொண்டு நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த நகராட்சி ஆணையர் மதிவாணன், பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் வைத்தீஸ்வரன் ஆகியோர் ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் ரமேஷ் தன் நண்பருடன் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.