அடாத மழையிலும் விடாமல் பால் பாக்கெட் போட்ட ராதாம்மா... குவியும் பாராட்டு
சென்னை: சென்னை அசோக் நகரை சேர்ந்த ராதா இடுப்பளவு தண்ணீரிலும் சென்று,தனது 300 வாடிக்கையாளர்கள் வீட்டுக்கு பால் சப்ளை செய்துள்ளார். இதற்காக அவர் கூடுதலாக எந்த கட்டணமும் வசூலிக்கவில்லை. காத்து அடிச்சாலும், மழை பெய்தாலும். என்னை நம்பியுள்ளவர்களுக்கு பால் போடுவேன் என்கிறார் ராதா. இரக்கம் இல்லாமல் 100 ரூபாய்க்கு பால் விற்றவர்கள் மத்தியில் இப்படி ஒரு அம்மா என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
ஒரு லிட்டர் பால் 200 ரூபாய்க்கு விற்றவர்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு தண்ணீரில், கொட்டும் மழையிலும், வீடு, வீடாக சென்று பால் பாக்கெட்களை வினியோகிக்கும் ராதாம்மாவின் சேவையை புகைப்படம் எடுத்து ஒருவர் டுவிட்டரில் பதிவிட... அந்த படம் வைரலாகிவிட்டது. ஏராளமானோர் ரீடுவிட் செய்துள்ளனர். பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறார் ராதாம்மா.
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பால், காய்கறிகள், மளிகை சாமான்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் பால், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, தக்காளி கிலோ, 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த நிலையில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், அதிகாலை, 5 மணிக்கு ஆவின் பால் பூத்தில் இருந்து பெற்ற பால் பாக்கெட்களை, அசோக் நகரில் இடுப்பளவு தண்ணீரில், ஒவ்வொரு வீடாக சென்று, வினியோகித்தார் ராதா
ராதாம்மாவின் சேவை
Our milk lady Radha in Chennai - been delivering for 25 years, and did not fail to show up this morning. pic.twitter.com/WrcCITS60e
— Ramanathan S (@madarassi) December 2, 2015
அசோக்நகர் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் ராதா பலருக்கு தெரிந்த முகம்.அடைமழை, வெள்ளம், புயல் என எந்த இயற்கை பேரிடராக இருந்தாலும் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக வீடுகளுக்கு பால் பாக்கெட் வினியோகிக்கும் அவரது மனிதநேயத்தை பலரும் வெகுவாக பாராட்டியுள்ளனர். இப்போது இணைய உலகமே ராதாம்மாவை கொண்டாடுகிறது.
பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்வதுதான் என் தொழில், காத்தடிச்சாலும், மழை பெய்தாலும் என்சேவை தொடரும் என்கிறார் ராதாம்மா. அவருக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம்தானே.
பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்த அண்ணாச்சி கடைகள் அனைத்திலும் அரைலிட்டர் பாக்கெட் பால் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் ரிலையன்ஸ் உள்ளிட்ட சூப்பர் மார்கெட்டுகளில் கூட பழைய விலைக்கே பால் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.