ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமல்: ஏழை, நடுத்தரமக்கள் விரக்தி
சென்னை: ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. பால் உப பொருள்களான வெண்ணெய், நெய் உள்ளிட்டவற்றின் விலையும் 15 சதவிகிதம் வரை உயர்த்தப்படுவதாக ஆவின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு கடந்த 25ம் தேதி பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.5, எருமை பால் ரூ.4 உயர்த்தப்படும். இது நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். கொள்முதல் விலை உயர்வால் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயரும். இந்த விலை உயர்வும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்தது.
எதிர்கட்சிகள் எதிர்ப்பு
ஆவின் பால் விலை உயர்வுக்கு திமுக, தேமுதிக, பாஜ, காங்கிரஸ், மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி. பி.ஐ., தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஊழலை மறைக்க
ஆவின் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ஊழலை அப்படியே மறைத்து விட்டு, ஊழலில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட பால் விலை ஒரே நேரத்தில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டின. இந்த விலை உயர்வு சாதாரண மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. விலை உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இன்று முதல் அமல்
ஒரே நேரத்தில் ரூ.10 விலை உயர்வு என்பது வரலாறு காணாத உயர்வு. இதனால், மாதத்திற்கு சுமார் ரூ.300 வரை கூடுதல் செலவாகும். ஓட்டல்களில் டீ, காபி விலை உயரும் என்றும் அவர்கள் கொந்தளித்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்வு இன்று முதல் அமலாகிறது. அதாவது, புளு, பச்சை, ஆரஞ்சு, மெஜந்தா நிறங்களில் விநியோகிக்கப்படும் அனைத்து பால் பாக்கெட்டும் லிட்டருக்கு ரூ.10 உயர்கிறது.
கூடுதல் தொகை எவ்வளவு?
மாதாந்திர அட்டை மூலம் ஒரு லிட்டர் ஆவின் பால் வாங்குவோர், தற்போது செலுத்தி வரும் தொகையைக் காட்டிலும், இன்று முதல் ஒரு லிட்டருக்கு கூடுதலாக மாதம் 300 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதன்படி, ஒரு லிட்டர் சமன்படுத்திய பால் 24 ரூபாயிலிருந்து 34 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் 29 ரூபாயிலிருந்து 39 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
சில்லறை விலையில்
கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 33 ரூபாயிலிருந்து 43 ரூபாயாகவும், கொழுப்பு சத்து நீக்கப்பட்ட பால் 23 ரூபாயிலிருந்து 33 ரூபாயாகவும் உயந்துள்ளது. இந்த வகைகளின் பால் விற்பனை சில்லறை விற்பனையில் ஒரு ரூபாய் முதல் மூன்று ரூபாய் வரை உயருகிறது.
நெய், வெண்ணெய்
இதன் காரணமாக, பால் பொருட்களின் விலையும் அதிரடியாக இன்று முதல் கூடுகிறது. அதாவது, ஏற்கனவே விற்கும் விலையை விட விலை உயருகிறது. அதன் படி, ஆவின் நெய் கிலோவுக்கு ரூ.40, வெண்ணெய் (கிலோ) ரூ.40, பாதாம் பவுடர் (கிலோ) ரூ.60, பால்கோவா (கிலோ) ரூ.80, சாதாரண மோர் ரூ.1. ஸ்பெஷல் மோர் ரூ.2, லஸ்சி ரூ.3, 200 கிராம் தயிர் ரூ.10 வரை உயருகிறது. குறைந்தபட்சம் ரூ.2 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை பால் பொருட்களின் விலை கூடுகிறது.
கடுமையாக பாதிப்பு
தமிழக அரசின் பால் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் ஆவின் பாலை மக்கள் வாங்கும்போது கடைக்காரர்களிடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் என்ன செய்வோம், அரசை போய் கோளுங்கள் என்று அவர்கள் விரக்தியுடன் கூறினர்.