ஆளாளுக்கு போராட்டம்: ஆவின் பால் விலையை ரூ.3 குறைக்கும் அரசு?
சென்னை: ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாக தேமுதிக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தெரிவித்துள்ளதையடுத்து விலையை குறைக்க அரசு ஆலோசித்து வருகிறதாம்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு திமுக, தேமுதிக, திக என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக அரசையும், ஜெயலலிதாவையும் கடுமையாக சாடினார். மேலும் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
தேமுதிக தவிர பிற எதிர்கட்சிகளும் பால் விலை உயர்வை கண்டித்து தொடர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளன.
இவ்வாறு கட்சிகள் போராட்டத்தில் குதித்து வரும் நிலையில் பால் விலையை ரூ.3 குறைக்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.