அண்ணாச்சி.. ஆவின் பால் என்னாச்சு??
சென்னை: சென்னை புறநகரில் பல கடைகளில் ஆவின் பாலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் சப்ளையில் ஏற்பட்டுள்ள தற்காலிக முடக்கம்தான். அத்தோடு ஸ்டாக் வைக்கும் முயற்சிகளில் மக்கள் குதித்ததாலும் பால் தட்டு்பபாடு ஏற்பட்டுள்ளது.
பிற மாவட்டங்களில் எப்படியோ, சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆவின் பாலுக்கு எப்போதுமே பெரும் கிராக்கி உண்டு. குழ்நதைகளின் வயிற்றைப் பதம் பார்க்காத பாதுகாப்பான பால் என்பதால் ஆவினுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு.
ஆனால் தற்போது சென்னையை உலுக்கிய பெரும் மழையால் ஆவின் பாலுக்கும் சிக்கல் வந்து விட்டது. பெரும் மழையால் அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணைக்குள் மழை வெள்ளம் சூழந்ததால் அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டதே இந்த திடீர் சிக்கலுக்குக் காரணம்.
பால் பண்ணைக்குள் வெள்ளம்
கன மழையைத் தொடர்ந்து சென்னை நகரின் பிற பகுதிகளைப் போலவே, அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையம் முழுவதும் தண்ணீர் 5 அடி உயரம் வரை வந்து விட்டது. இதனால் எந்திரங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
3.35 லட்சம் லிட்டர்
இந்த பால் பண்ணையில் தினசரி 3.35 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அப்படியே நின்று போனதால் சென்னையில் பாலுக்கு சிக்கல் வந்து விட்டது.
நீங்க பால் கொடுங்க
இதையடுத்து விழுப்புரம், காக்களூர், சோழிங்கநல்லூர், மாதவரம் பால்பண்ணைகளுக்கு உற்பத்தியை பிரித்துவிட்டனர். அவர்கள் வழக்கமாக உற்பத்தி செய்யும் பாலைவிட கூடுதலாக 42 ரூட்டுகளுக்கான பாலையும் சேர்த்து உற்பத்தி செய்து வருகிறார்கள். இது கூடுதல் வேலைப் பளுவை ஏற்படுத்தியுள்ளது.
தட்டு்பபாடு
இந்த பால் வந்து சேருவதில் பல இடங்களில் நேற்று முதல் சிக்கல் நிலவுகிறது. இதனால் மக்களிடையே டென்ஷன் கிளம்பியது. இதையடுத்து கிடைக்கும் பாலையெல்லாம் மக்கள் வாங்கி ஸ்டாக் வைக்க ஆரம்பித்தனர். இதனால் கடைகளில் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பால் இல்லை
பல புறநகர்ப் பகுதிகளில் நேற்று பால் கிடைக்காமல் மக்கள் தவிப்புக்குள்ளாகினர். ஆவின் மட்டுமல்லாமல் தனியார் பாலையும் வாங்க ஆரம்பித்த மக்கள் கூட்டத்தால் எந்தப் பாலுமே கிடைக்காத நிலை பல இடங்களில் காணப்பட்டது.
சீக்கிரமே அம்பத்தூர் பால் பண்ணை சகஜ நிலைக்குத் திரும்பினால்தான் சிக்கல் தீரும்.