உலமா சபை எதிர்ப்புக்கு நடுவே கலாமுக்கு சிலை திறப்பு.. பேக்கரும்பு சென்று சேர்ந்தது வெண்கல சிலை
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் ஜமாஅத்துல் உலமா சபை எதிர்ப்புக்கு நடுவே முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை திறக்கும் முடிவில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. 7 அடி உயர வெண்கல சிலை, கலாமின் நினைவிடம் அமைந்துள்ள பேக்கரும்புக்கு இன்று சென்று சேர்ந்தது.
மக்கள் ஜனாதிபதி என்ற புகழுக்கு சொந்தக்காரரான, ஏவுகணை நாயகன், அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு நாள் வரும் 27ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
முதல் ஆண்டு நினைவு நாளுக்குள், கலாம் நினைவிடத்தில் அவரது சிலையை திறக்க மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான பணிகளை ஆரம்பித்தது.
உலமாக்கள் கூட்டம்
இந்நிலையில், ராமநாதபுரத்தில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ஏ.வலியுல்லா ஹழரத் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
சிலை வைக்க எதிர்ப்பு
இக்கூட்டத்தில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைப்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது. இதுவரை இஸ்லாமியத் தலைவர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. சிலை வைப்பது இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் அப்துல் கலாமுக்கு, உருவச் சிலை வைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிலை சென்று சேர்ந்தது
இந்த எதிர்ப்பு காரணமாக, சிலை நிறுவதில் சிக்கல் ஏற்படும் என்று தகவல் பரவிய நிலையில், 7 அடி உயரம் கொண்ட கலாமின் வெண்கல சிலை இன்று, கலாம் நினைவிடம் அமைந்துள்ள பேக்கரும்பிற்கு சென்று சேர்ந்தது.
கலெக்டர் உறுதி
இச்சிலையை மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளார் மணிவண்ணன் மற்றும் உயரதிகாரிகள் பார்வையிட்டனர். 27ம் தேதி நடைபெறும் சிலை திறப்பு விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொள்வதாக, அப்போது நடராஜன் தெரிவித்தார்.