அப்துல் கலாம் நினைவு தினம்: கிருஷ்ணகிரி ஜோதிநகர் அரசு பள்ளி மாணவர்கள் மலரஞ்சலி
கிருஷ்ணகிரி: மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி காலமானார். அவரது உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
27.07.2016 புதன்கிழமையன்று ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களது முதலாம் ஆண்டு நினைவு நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கபட்டது.
மாணவர்கள் அஞ்சலி
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளும் மவுன ஊர்வலம், மலரஞ்சலி செலுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜோதிநகர் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் அப்துல் கலாம் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
கலாமின் நற்பண்புகள்
தலைமை ஆசிரியர் தமது தலைமை உரையில் அப்துல் கலாம் அவர்களின் பல்வேறு பண்பு நலன்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள் மீது அவர் கொண்ட ஈடுபாடு ஆகியவற்றை விளக்கி, அவரின் கனவுகளை நிறைவேற்றும் பொறுப்பு நம்மிடம் உள்ளது எனக் கூறினார்.
மாணவர்கள் மலரஞ்சலி
அலங்கரிக்கப்பட்ட கலாம் அவர்கள் படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய மாணவர்களும், ஆசிரியர்களும் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலியும் செலுத்தினர்.
பள்ளியில் நினைவு நாள்
பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முன்னதாக பள்ளி உதவி ஆசிரியர் திருமதி மு.இலட்சுமி அனைவரையும் வரவேற்றார். உதவி ஆசிரியர்கள் திருமதி ந. திலகா, த. லதா, திரு வே. வஜ்ஜிரவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.