தகுதி நீக்க வழக்கை முதலில் விசாரித்த நீதிபதி... அக்.9க்கு ஒத்திவைத்தார்
எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கையும் ஒன்றாக ஒரே நேரத்தில் விசாரிக்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி அக்டோபர் 9ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிராக தினகரன் தரப்பினர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரும் ஆளுநரை சந்தித்து முதல்வருக்கு எதிராக கடிதம் அளித்தனர் என்ற காரணம் காட்டி சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார்.
இதை எதிர்த்து தகுதி நீக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதே போல தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவர் சட்டசபையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.கஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் விசாரணையும் ஹைகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கினிடையே தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் தன்னையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு வாதிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் விசாரணை
இந்த இரண்டு வழக்குகளும், கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி நீதிபதி துரைசாமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அதுவரை 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிப்பு வெளியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இதேபோல ஸ்டாலின் தொடர்ந்த வழக்கும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினகரன் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி
இன்று இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் ஏற்கனவே விசாரித்த நீதிபதி துரைசாமிக்கு பதிலாக நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல தினகரன் தரப்பில் கடந்த முறை மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜரானார். இன்று தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்காக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் கார சார வாதம்
சபாநாயகர் தரப்பில் முகுல் ரோத்தகி, ஆர்யமா சுந்தரம், சி.எஸ். வைத்தியநாதன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர். உயர்நீதிமன்றத்தில் கார சார விவாதம் நடைபெற்றது. அபிஷேக் சிங்வி தனது விவாதத்தை நீதிபதியின் முன் வைத்தார்.
18 எம்எல்ஏக்கள் கட்சி தாவவில்லை
வாதிட்ட அபிஷேக் சிங்வி, அரசுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பினர் வாக்களித்தனர். 18 எம்எல்ஏக்களும் வேறு எந்த கட்சிக்கும் செல்லவில்லை என்றார்.
ஹைகோர்ட் நீதிபதி கேள்வி
ஓபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கையும் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கையும் சேர்த்து விசாரிக்கலாமா என நீதிபதி கேள்வியெழுப்பினார். இதற்கு டிடிவி தரப்பு வழக்கறிஞர் ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே கொறாடா சக்கரபாணி தொடர்ந்த வழக்கு அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இரண்டு வழக்கும் வேறு வேறு
இதே போல எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கையும், நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கையும் ஒரே நேரத்தில் விசாரிக்க வேண்டுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு சபாநாயகர் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி முதலில் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கை விசாரிக்க கோரினார்.
அபிஷேக் சிங்வி கோரிக்கை
அதே நேரத்தில் தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, முதலில் தகுதி நீக்கத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்து உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். நீதிமன்றத்தில் கார சார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
உணவு இடைவேளைக்குப் பின்னர் வழககு மீண்டும் விசாரணைக்கு வந்தது. எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கை நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். அபிஷேக் சிங்வி தனது தரப்பு வாதத்தை முன் வைத்தார். வழக்கு விசாரணையை 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.