விஷால் எங்களுக்கு கட்டளையிடுவதா? அபிராமி ராமநாதன் ஆவேசம்!
தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டளை இடுவது போல நடிகர் விஷால் செயல்படுவதாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை : திரையரங்க உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவது போல நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பேசுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசியுள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள சினிமா டிக்கெட் விலை உயர்வு குறித்து சென்னையில் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது: சின்ன படங்கள், பெரிய படங்களுக்கு ஏற்ப கட்டணத்தை ரூ. 150 முதல் குறைத்துக் கொள்ளும் வசதியை அரசு அளித்துள்ளது. அதற்காகத் தான் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
விஷால் கருத்து
கமிட்டி அமைத்து பார்க்கிங், தின்பண்ட கட்டண வசூலை கவனிப்போம் என்று நடிகர் விஷால் சொல்கிறார். எங்களுக்கு என்ன வருத்தம் என்றால் அவர்களுக்கும் ஒரு சங்கம் உள்ளது, எங்களுக்கும் ஒரு சங்கம் உள்ளது. எங்களையும் அழைத்து பேசி ஒரு முடிவை எடுக்கலாமே அதை விட்டுவிட்டு தியேட்டர் உரிமையாளர்களுக்கு கட்டளையிடுவதை போல விஷால் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.
யாருக்கும் யாரும் முதலாளி இல்லை
யாரும் யாருக்கும் முதலாளி கிடையாது. திரையரங்கு இல்லாமல் அவர்கள் படத்தை திரையிட முடியாது, நாம் அண்ணன் தம்பிகளைப் போல படம் இல்லாமல் நாங்கள் தியேட்டரை ஓட்ட முடியாது. எல்லா சங்கத்தையும், விநியோகிஸ்தரையும் அழைத்து பேசி சுமூகமான தீர்வு காண வேண்டும்.
விஷால் கட்டளையிடலாமா?
குற்றம் கண்டுபிடிப்பது போல கமிட்டி அமைப்பேன் என்று சொல்கிறார் விஷால். அவர்கள் மீது பல குற்றங்கள் இருந்தாலும் அதைச் சொல்ல நாங்கள் தயாராக இல்லை. ஏனெனில் அவர்களுடன் பேசி தான் தீர்வு காண வேண்டும் என்று நினைக்கிறேன்.
நடவடிக்கை எடுக்கப்படும்
பார்க்கிங் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து நாங்கள் இப்போதைக்கு கருத்து கூற முடியாது. இணையதளம் பொருத்தவரை கட்டண வசூலை முறைப்படுத்துவோம். எனக்கு தெரிந்த வரை எந்த ஒரு திரையரங்க உரிமையாளரும் திருட்டு விசிடிக்கு கொடுக்க மாட்டார்கள். அப்படி செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
அம்மா குடிநீர் விற்கத் தயார்
அம்மா குடிநீர் கொடுத்தால் நாங்களும் தண்ணீர் விநியோகிக்க தயாராக இருக்கிறோம். வெளியில் விற்கும் விலைக்கு ஏற்ப தான் தியேட்டர்களிலும் தண்ணீர் விற்கப்படுகிறது. இரட்டை விலை விற்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இதனால் அதை மீறி நாங்கள் செயல்படமாட்டோம்.
இப்போது தான் விலை
14 வருடங்களாக எங்களுக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இப்போது தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது, எனவே பார்க்கிங், தின்பண்டங்கள் அதிக விலையில் விற்கப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம். அரசாணை வந்த பின்னர் அதன் அடிப்படையில் எங்கள் முடிவைச் சொல்வவோம்.