லிவ் இன் ரிலேசன்... சென்னையில் அதிகரிக்கும் கருக்கலைப்பு.... அதிர்ச்சி புள்ளி விபரம்
சென்னை: திருமணத்திற்கு முன்பாகவே உறவு கொள்வது, லிவ் இன் ரிலேசன் போன்றவற்றால் சென்னையில் கருக்கலைப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. ஆணும் பெண்ணும் திருமணத்திற்கு முன்பாக இணைந்து வாழும் வாழ்க்கையை சொன்னது ஓகே கண்மணி திரைப்படம்.
இந்த ஓகே கண்மணி பாணியிலான வாழ்க்கையினால் கடந்த 2008-2014 ஆண்டு ஆய்வின்படி கருக்கலைப்புகள் சென்னையில் அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அதிர்ச்சிகரமான புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டில் 12.6% இருந்து 2014ஆம் ஆண்டிற்குள் 13.8% ஆக கருக்கலைப்பு அதிகரித்துள்ளதாக ராபர்ட் ஜான்சன் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. கருக்கலைப்பு தொடர்பான வழக்குகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு
திருமணமான தம்பதிகள் முதலில் எதிர்பார்ப்பது குழந்தைதான். கருவில் குழந்தை பாதிக்கப்பட்டால் அது பின்னாடி பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், தாய்மார்களின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து என கருதி கலைக்கப்படும். இதனை மருத்துவர்களும், பெற்றோர்களும் ஆதரிப்பார்கள்.
சீரியல்களில் கருக்கலைப்பு
இன்றைக்கு டிவி சீரியல்களில் கருக்கலைப்பு என்பது ஜஸ்ட் லைக் தட் போல காண்பிக்கப்படுகிறது. அதுவும் சன் டிவி சீரியல்களில்தான் அதிகம் கருக்கலைப்பு சீன்கள் வைக்கப்படுகின்றன. கர்ப்பம், கருவை கலைக்க திட்டமிடுவது, தானாகவே கருவை கலைத்து விட்டு வீட்டிற்கு தெரியாமல் கர்ப்பிணி போல நடிப்பது என சீரியல்கள் சித்தரிக்கப்படுகின்றன.
லிவ் இன் உறவுமுறை
சென்னையில் கருக்கலைப்பு அதிகரிப்பதற்கு, திருமணத்துக்கு முன்னதாகவே பெண்கள் உடலுறவுக் கொள்வதானால் கருக்கலைப்பு அதிகரிக்கப்படுகிறது. சமூகத்தில் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும் 'லிவ்-இன்-ரிலேஷன்ஷிப்' உறவு முறை காரணமாகவும் அதிகரிப்பதாக மருத்துவர்களும், தொண்டு நிறுவனங்களும் கூறுகின்றனர்.
மாத்திரைகள் மூலம் கரு கலைப்பு
செக்ஸ், கருக்கலைப்பு உள்ளிட்டவற்றுக்கு பெண்கள் பயன்படுத்தும் 'ஓடிசி' மாத்திரைகளின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். முறையாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் 'ஓடிசி' வழங்கப்படுவது தடை செய்யப்பட வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கருக்கலைப்பு நிறுவனங்கள்
கரு உருவாகவில்லையே... குழந்தை இல்லையே என்று ஒருபக்கம் ஏராளமான தம்பதியர் ஏங்கிக்கொண்டிருக்கின்றனர். மற்றொரு பக்கம் கருவை கலைப்பது அதிகரித்து வருகிறது. அனைத்து கருக்கலைப்பு நிறுவனங்களில் செய்யப்படும் கருக்கலைப்புகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவிக்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையின் பெண்கள் நல மருத்துவர் ஷீலா ராணி.