தமிழக ரிசர்வ் தொகுதிகளில் மீண்டும் அதிகபட்ச வாக்குகள் பதிவு
சென்னை: தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளில் 2009ம் ஆண்டைப் போலவே மீண்டும் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தின் வாக்குப் பதிவு சதவீதத்தில் மாநகரங்களைக் காட்டிலும், சிறுநகரங்கள் சாதனை படைத்துள்ளன.
சிறுநகரங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், சென்னை உள்பட சில மாநகரங்களில் 65 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகின. தென் சென்னையில் 57.86 சதவீதமும், மத்திய சென்னையில் 60.90 சதவீதமும், வட சென்னையில் 64.63 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. சென்னையைத் தவிர்த்து பிற மாநகரங்களான கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகியவற்றில் வாக்குப் பதிவானது 60 முதல் 70 சதவீதத்துக்குள்ளாகவே இருந்தது.
நாடாளுமன்றத்துக்கு நடைபெறும் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப் பதிவு சதவீதத்தில் சிறுநகரங்களே சாதனை படைத்து வருகின்றன. குறிப்பாக தருமபுரி, கரூர் உள்ளிட்டவை ஒவ்வொரு தேர்தலிலும் முதல் மூன்று இடத்துக்குள் வந்து விடுகின்றன.
கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் 81.35 சதவீத வாக்குகள் பதிவாகின. இப்போது, 79.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கடந்த தேர்தலில் முதலிடத்தில் இருந்த கரூர் இந்தத் தேர்தலில் இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தை தருமபுரி தொகுதி கைப்பற்றியுள்ளது.
அந்தத் தொகுதியில் 80.99 சதவீத வாக்குகள் பதிவாகி, மாநிலத்திலேயே அதிகபட்ச வாக்குகள் பதிவான தொகுதி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
சிறுநகரங்களில் கிருஷ்ணகிரி, அரக்கோணம், திண்டுக்கல், கடலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி என பல்வேறு தொகுதிகளில் வாக்குப் பதிவு 77 சதவீதத்தைத் தொட்டுள்ளது. குறிப்பாக, தனித் தொகுதிகளில் சிறப்பான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம் தனித் தொகுதியைத் தவிர்த்து மற்ற ஆறு தனித் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு 70 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.
திருவள்ளூரில் 74.75 சதவீதமும், விழுப்புரத்தில் 76.02 சதமும், நீலகிரியில் 74.3 சதவீதமும், சிதம்பரத்தில் 79.85 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 76.69 சதமும், தென்காசியில் 74.3 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. காஞ்சிபுரத்தில் மட்டும் 64.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் அனைத்து தனித் தொகுதிகளிலும் 70 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.