ஜெயலலிதா இல்லாததால் வழிநடத்த யாரும் இல்லாமல் அதிமுக தடுமாறுகிறது - திருமாவளவன்
ஜெயலலிதா இல்லாததால் வழிநடத்த யாரும் இல்லாமல் அதிமுக தடுமாறுகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
அரியலூர் : ஜெயலலிதா இல்லாததால் வழி நடத்த சரியான தலைமை இன்றி அதிமுக தடுமாறுகிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காவிரி உரிமை மீட்பு நடைபயணத்திற்கான இரண்டாவது குழு இன்று அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பேருந்துநிலையத்தில் இருந்து துவங்கியது. இதில் திமுகவின் ஆ.ராசா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் பேசிய திருமாவளவன், காவிரி நீருக்கான உரிமைப்போர் நடந்துவரும் வேளையில் அதை திசை திருப்பும் விதமாக நடக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்துவதா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தாங்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிரானவர்கள் இல்லை என்றும், இந்த சமயத்தில் நடத்தவேண்டாம் அப்படியே நடத்தினாலும் வேறு மாநிலத்தில் நடத்துங்கள் என்றுதான் கோரிக்கை வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சிகள் அறிவித்து இருக்கும் நிலையில், அதற்கு பதில் பச்சைக்கொடி காட்டுவோம் என்று ஒரு அமைச்சர் பேசி இருப்பது வேடிக்கையானது.
அதிமுகவை வழிநடத்த தகுதியான தலைவர்கள் இல்லாததே இதுபோன்ற பேச்சுகளுக்குக் காரணம். ஜெயலலிதா இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும், மத்திய அரசோடு சேர்ந்து அவர்களின் செயல்களுக்கு எல்லாம் தமிழக அரசு துணை போவது மக்களுக்கு செய்யும் துரோகம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.