EXCLUSIVE: அன்று கோவை.. இன்று சென்னை.. நகரங்களை வளைக்கும் 'சூயஸ் வாட்டர்'.. எச்சரிக்கும் கம்யூ.!
நெமிலி குடிநீர் திட்டத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை தமிழக அரசே ஏன் எடுத்து நடத்தக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை சூயஸ் என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்தன. இப்படி வெளிநாட்டு கம்பெனிகளுக்கு நம் நாட்டு ஒப்பந்தத்தை வழங்கினால் பொதுமக்கள் நலன் பாதிக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று முன்தினம் கண்டன அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.
சூயஸ் கம்பெனிக்கு ஏன் குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை தரக்கூடாது, நெமிலி கடல்நீரை குடிநீராக மாற்றுவதில் தற்போது என்னதான் பிரச்சனை நடந்து வருகிறது என்பது குறித்து கே.பாலகிருஷ்ணனிடமே "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக கேட்டோம். அப்போது அவர் அளித்த கருத்துக்கள்தான் இவை:
கேள்வி: நெமிலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தில் என்ன பிரச்சனை?
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் என்று சொல்லி ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். ஒருநாளைக்கு 15 கோடி லிட்டர் தண்ணீரை எடுத்து விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார்கள். அதன்படி இத்திட்டத்தினை துவங்க 5 விண்ணப்பதாரர்கள் டெண்டர் கோரி விண்ணப்பித்திருந்தார்கள். இந்த விண்ணப்பத்தை சரிபார்க்க தமிழக அரசு சார்பில் AECOM என்ற கன்சல்டன்ட் நிறுவனம் நியமிக்கப்பட்டது. ஆனால் இந்த நிறுவனம் விண்ணப்பித்த 5 பேருமே தகுதியற்றவர்கள் என்று சொல்லிவிட்டது.
அப்படியானால், மீண்டும் டெண்டர் கோரும் முறையை துவக்கி வேற தகுதியான கம்பெனியை தேர்ந்தெடுப்பதுதானே முறை? ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏற்கனவே விண்ணப்பித்த 5 கம்பெனிகளில் 2 கம்பெனி மட்டும் தேர்ந்தெடுத்து டெண்டர் விட்டமாதிரி அரசு முடிவு செய்துள்ளது. இந்த 2 கம்பெனிகளில் கோப்ரா என்ற கம்பெனி மீது ஏற்கனவே சிபிஐ வழக்கு வேறு ஒன்று நடந்து வருகிறது. அதனால் அதை நிராகரித்து சூயஸ் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தத்தை கொடுப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது வெளிவந்திருக்கிறது. தமிழக அரசு நியமித்த கன்சல்டன்ட் நிறுவனமே, சூயஸ் மற்றும் கோப்ரா இரண்டிற்குமே தகுதி இல்லை என்று சொல்லிவிட்டபிறகு அதே கம்பெனிக்கு மீண்டும் டெண்டர் கொடுப்பது முறையானதாக இருக்காது.
கேள்வி: சூயஸ் கம்பெனிக்கு கொடுப்பதால் எந்த வகையில் பாதகங்கள் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்?
சூயஸ் நிறுவனம் என்ன சொல்லுதோ, அந்த பணத்தை கொடுக்க வேண்டியது வரும். எவ்வளவு பணம் என்று அவர்கள்தான் நிர்ணயிப்பார்கள். ஏற்கனவே மின்சாரத்தை வாங்கியதில் முறைகேடு போல, இப்போது தண்ணீர் வாங்குவதிலும் முறைகேடு வர வாய்ப்பு உண்டு.
கேள்வி: நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் முறையாக செயல்படுத்த சிபிஎம் சார்பில் சொல்லப்படும் கருத்து என்ன?
இதை பேசாமல் அரசாங்கமே எடுத்து நடத்தலாம். எதுக்காக ஒரு பிரைவேட் கம்பெனியிடம் நாம் தர வேண்டும்? ஏற்கனவே இந்த சூயஸ் நிறுவனமானது, பல நாடுகளில் இந்த குடிநீர் விநியோகம் செய்து பல பிரச்சனைகள் வந்துள்ளது. அதனால் சூயஸ் கம்பெனிக்கு இந்த திட்டத்தை தரக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து. ஏற்கனவே நெமிலியில் தமிழக அரசு, ஒரு கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை செயல்படுத்தும்போது, அதேமாதிரி இன்னொரு திட்டத்தையும் அரசாங்கமே செயல்படுத்தலாமே? ஏன் குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் தரவேண்டும். தனியார் கிட்ட கொண்டு போய் கொடுத்தால், அவர்கள் அந்த குடிநீருக்கு விலையை நிர்ணயிப்பார்கள். அது அதிகமான விலையாக கூட இருக்கலாம். அந்த விலையை நாம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த குடிநீரை கொண்டு போய் மக்களிடம் தந்தால், அவர்களின் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே குடிநீர் விஷயத்தில் இதை செய்யக்கூடாது என்பதே எங்கள் கருத்து.
இவ்வாறு பாலகிருஷ்ணன் தனது தரப்பு கருத்தை தெரிவித்தார்.
இதே சூயஸ் நிறுவனம்தான் கோவை மாநகரில் குடிநீர் விநியோகத்தை கையில் எடுக்கப் போகிறது. காசுக்கு தண்ணீர் வழங்கப் போகிறது - 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும் என்ற கவர்ச்சி வாசகத்துடன். இதற்காக பிரான்ஸைச் சேர்ந்த இந்த நிறுவனத்துடன் ரூ. 2961 கோடிக்கு கோவை மாநகராடசி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதே நிறுவனம்தான் தற்போது நெமிலி வழியாக சென்னைக்குள்ளும் காலடி எடுத்து வைக்கவுள்ளனர்.
கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு பின்னால், வணிகம் விரிந்து காணப்படுகிறது. அதோடு அரசியல் ஆழமாக வேரூன்றி உள்ளது. வணிகத்தையும் அரசியலையும் வடிகட்டினால்தான் கடல்நீர் நன்னீராக நமக்கு கிடைக்கும். கடல்நீரினை மக்கள் குடிக்கிறார்களோ இல்லையோ, இந்த திட்டம் மக்களையே குடித்து விடாமல் இருந்தால் சரி!!