படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து.. பரிதாபமாக பறிபோன உயிர்.. 'தமிழ் பிக் பாஸ் 2' வீட்டில் பரபரப்பு
Recommended Video
சென்னை: பிக்பாஸ் 2 தமிழ் செட்டில், ஏசி மெக்கானிக் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ளது ஈவிபி பிலிம் சிட்டி. இங்குதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் பங்கேற்பதற்காக அங்கு பிரமாண்ட வீடு செட் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதற்காக பல்வேறு தொழில்நுட்ப வல்லுநர்களும் இரவு பகலாக தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்கள். அதில் ஒருவர்தான் ஏசி மெக்கானிக் குணசேகரன்.
மாடியிலிருந்து விழுந்தார்
30 வயது நிரம்பிய குணசேகரன் அரியலூர் மாவட்டம் மாத்தூர் என்ற பகுதியை சேர்ந்தவர். நேற்று இரவு அவருக்கு ஒதுக்கியுள்ள அறையில் சென்று சாப்பிட்டு விட்டு கை கழுவ வெளியே வந்துள்ளார். அப்போது நிலை தடுமாறி இரண்டாவது மாடியில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதை பார்த்து பதட்டம் அடைந்த ஊழியர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரணை
மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் குணசேகரன் பலியானார். இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குணசேகரன் மரணம் குறித்த காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வருடமும் பலி
பிக் பாஸ் செட்டில் விபத்து நடப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த வருடம் பிக் பாஸ் 1 சீசன் படப்பிடிப்பு நடைபெற்றபோது அதில் பணியாற்றிய ஊழியர் சலீம் முகமது ஷேக் என்பவர் மர்மமான முறையில் பலியானார். இவர் மும்பையைச் சேர்ந்தவர். இவர் அங்கு பிளம்பராக வேலை பார்த்து வந்தார். வலிப்பு நோயால் அவர் மரணமடைந்ததாக கூறப்பட்டது.
மர்மம்
ஒரே இடத்தில் இது போன்ற துர் மரணங்கள் நடைபெற்று வருவதால், இதற்கு பரிகார பூஜை செய்யலாம் என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகிறார்கள். உரிய பாதுகாப்பு, மருத்துவ வசதிகள் அங்கு இல்லையோ என்ற கேள்வியை மேலும் பலர் எழுப்புகிறார்கள்.