சூளகிரியில் பஸ் மீது கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதி 7 பேர் பலி, 33 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பேருந்து மீது கண்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று இன்று மதியம் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் சுமார் 60 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள சின்னாறு என்ற இடத்தின் அருகே வந்த பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சின்னாறு பகுதியில் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பேருந்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் ஒரு பெண் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 33 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறை, தீயணைப்புத்துறை மற்றும் போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடைத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் தவறினால் விபத்து ஏற்பட்டதாக அமைச்சசர் பாலகிருஷ்ணா ரெட்டி தெரிவித்துள்ளார்.