விதிகளை மீறி வாகன தணிக்கையில் ஈடுபட்ட ஆர்டிஓ.. அவினாசி அருகே விபத்தில் தம்பதி பலி: மக்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர்: அவினாசி அருகே வாகன தணிக்கையின் போது ஏற்பட்ட விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி ஆறு வழிச்சாலையில் ஆர்டிஓ தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கார் ஒன்றை அதிகாரிகள் தணிக்கை செய்ய முயன்றனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பழனிச்சாமி - மல்லிகா தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விதிகளை மீறி ஆறு வழிச்சாலையில் வாகன தணிக்கை செய்ததே இரண்டு உயிர்கள் பறிபோக காரணம் என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள் ஆர்டிஓவை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆர்டிஓ மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.