லாரி மீது கார் மோதல்: 3 பேர் பலி... திண்டிவனம் அருகே பரிதாபம்
திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
திண்டிவனம்: திண்டிவனம் அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (52). இவரது மகன் அரவிந்தன் (23), இவர்களது உறவினர் ராஜமாணிக்கம் (60). இவர்கள் 3 பேரும் ஒரு காரில் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். காரை ராஜமாணிக்கம் ஓட்டி சென்றார்.
இந்த கார் திண்டிவனம் ஒலக்கூர் கூட்டு ரோடு அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தறிகெட்டு ஓடியது.
பின்னர் அந்த கார் தடுப்புச் சுவர் மீது ஏறி மறுபக்கமாக சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. இதையடுத்து காரில் இருந்த மனோகரன், அரவிந்தன், ராஜமாணிக்கம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டனர்.
தகவல் அறிந்ததும் திண்டிவனம் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஒலக்கூர் சப்-இன்ஸ் பெக்டர் பாபு மற்றும் போலீஸார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.