போகியால் புகை மூட்டம்.. தமிழகத்தின் பல்வேறு இடங்களில், சாலை விபத்துகளில் 5 பேர் பலி
தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் ஏற்பட்ட விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் ஏற்பட்ட விபத்துகளில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதல் புதிய புகுதல் போகி ஆகும்.
இதனை முன்னிட்டு வீட்டில் இருந்த பழைய பாய் உள்ளிட்ட பொருட்களை மக்கள் தங்கள் வீட்டு வாசலில் போட்டு கொளுத்தினர். இதனால் தமிழகம் முழுவதும் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டது.
இருசக்கர வாகனங்கள் விபத்து
தமிழகத்தில் பனிமூட்டம் மற்றும் போகி புகையால் நடந்த சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே பனிமூட்டத்தால் இருவேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகத்தை அடுத்த அச்சிரப்பாக்கம் அருகே அரப்பேடு என்ற இடத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மதுராந்தகம் 3 பேர் பலி
இந்த விபத்தில் பக்தவச்சலம் என்பவரும் மற்றொரு இளைஞரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
மதுராந்தகம் அருகே இரட்டை ஏரி என்ற இடத்தில் நடைபெற்ற மற்றொர விபத்தில் கார் மோதியதில் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.
சாலையை கடந்தபோது
இதேபோல் பெரம்பலூர் அருகே கல்பாடியில் கார் மோதி சாலையை கடக்க முயன்ற 2 பேர் உயிரிழந்தனர். கருப்பையா, ஆனந்த் ஆகியோர் மீது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் மோதியது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆம்னி பேருந்து கவிழ்ந்தது
இதனிடையே திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
10 பேர் காயம்
மேலும் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்ததில் 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போகி புகையால் விபத்து
ஏற்கனவே கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் போகி புகையும் சேர்ந்ததால் அடந்த புகைமூட்டமாக காணப்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு புகைமூட்டம் காணப்பட்டதால் விபத்துகள் நேரிட்டதாக தெரிகிறது.