என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள்.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் அழகிரி!
என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை: என்னை பொருத்தவரை தொண்டர்கள்தான் தலைவர்கள் என முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து 2014ஆம் ஆண்டு நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதி மறைவுக்கு பிறகும் கட்சியில் சேர்க்கப்படவில்லை. அவரை கட்சியில் சேர்க்க திமுக செயல் தலைவரான ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
இதனால் அதிருப்தியில் உள்ளார் அழகிரி. ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை காட்டியே ஆகவேண்டும் என்றும் கட்டாயத்தில் உள்ள அழகிரி வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் பேரணி நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.
சென்னையில் பேரணி
சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று கூறிய அழகிரி, அன்றைய தினம் ஆதங்கத்தை தெரிவிப்பேன் என கூறியுள்ளார்.
தனிக்கட்சி?
மேலும் வெயிட்டான பொறுப்போடு அழகிரி மீண்டும் கட்சியில் சேர்க்கப்படாத நிலையில் அவர் தனிக்கட்சி தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அழைப்பு விடுக்கவில்லை
இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அழகிரி செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள பேரணி குறித்து பேசினார். சென்னையில் நடைபெறும் பேரணி குறித்து எந்த தலைவருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.
தொண்டர்கள் தான் தலைவர்கள்
என்னை பொருத்தவரை தொண்டர்கள் தான் தலைவர்கள். மதுரையில் நாளை தொண்டர்களை சந்திக்கவுள்ளேன். இவ்வாறு அழகிரி கூறினார். தொண்டர்களை நாளை சந்திக்கவுள்ள அழகிரி அவர்களிடம் முக்கிய கருத்துக்களை கேட்கலாம் என தெரிகிறது.