சாப்ட்வேர் நிறுவனங்களை ஏமாற்றி பணியில் சேரும் கொலைகாரரர்கள்!
சென்னை: பெருங்குடி பெண் சாப்ட்வேர் என்ஜீனியரை கொன்ற கொலைகாரன் ஏற்கனவே ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து கொலை செய்தவன் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
6 ஆண்டுகளுக்கு முன் இளம்பெண் கொலைவழக்கில் கைதாகி ஆதாரம் எதுவும் இன்றி விடுதலையானவன் என்பதும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்
நாவரசு – ஜான் டேவிட்
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996-ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தபோது அதே பல்கலைக்கழகத்தில் படித்த சீனியர் மாணவரான ஜான் டேவிட் வெட்டி கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை ரத்து
இக்கொலை வழக்கில் கடலூர் செசன்சு நீதிமன்றம் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் டேவிட் மேல் முறையீடு செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த 2004-ம் ஆண்டு ஜான் டேவிட்டுக்கு விதித்த இரட்டை ஆயுள் தண்டனையை ரத்து செய்தது.
தலைமறைவான டேவிட்
கடந்த 2004-ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்டிருந்த இரட்டை ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டதும் கடலூர் சிறையில் இருந்து ஜான் டேவிட் விடுதலையானார். அப்போது அவர் நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் காட்சி அளித்தார். அதன் பிறகு அவர் பாதிரியாராக மாறி விட்டதாகவும், ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதன் பிறகு ஜான் டேவிட் பற்றி எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.
உச்சநீதிமன்றம் உறுதி
உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை செல்லும் என்றும், ஜான் டேவிட்டை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருந்தனர்
ஐ.டி.நிறுவனத்தில் வேலை
ஆனால் ஜான் டேவிட் தனது 'கெட்-அப்'- ஐ மாற்றிக் கொண்டு சென்னை வேளச்சேரியில் உள்ள சதர்லேண்ட் பி.பி.ஓ. நிறுவனத்தில் ரூ.30,000 சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். இப்பணியில் சேர ஜான் டேவிட்டின் நுனி நாக்கு ஆங்கிலம் பெரிதும் உதவி உள்ளது.
7 ஆண்டுகளாக வேலை
7 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஜான் டேவிட் ஜான் மாரிமுத்து என்றும் தனது பெயரை மாற்றிக் கொண்டார். ஆனால் போலீசார் எப்படியோ மோப்பம் பிடித்தனர். இதையறிந்த ஜான் டேவிட் போலீசில் சரணடைந்தார்.
கொலைகாரன் வெங்கடாஜலபதி
இதேபோல பெருங்குடியில் சாப்ட்வேர் நிறுவன பெண் ஊழியர் கொலை வழக்கில் கைதாகியுள்ள வெங்கடாசலபதியும் கடந்த 2008ம் ஆண்டு பிரவீணா என்ற பெண்ணை கொலை செய்துள்ளார்.
விடுதலையான குற்றவாளி
பொதுமக்கள் முன்பு இந்த கொலை நடந்தது. ஆனாலும் அந்த கொலை வழக்கில் இருந்து விடுதலையான வெங்கடாசலபதி, கடந்த மூன்று ஆண்டுகளாக டி.சி.எஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளான்.
சூப்பர்வைசர் வேலை
கொலை வெறி பிடித்தவனின் கீழ் மூன்றாண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளோம் என்பதை நினைக்கும் போது அச்சமாக இருக்கிறது என்று கூறியுள்ளனர் உடன் பணி புரிந்தவர்கள்.
பணியாளர்களின் விபரம்
சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும் என்றால், ஊழியர்களின் அனைத்து விபரங்களும் சரிபார்க்க வேண்டும். அதற்கு நாஸ்காம் உதவி செய்யும். நேசனல் ஸ்கிரிப்ட் ரெஜிஸ்டரி மூலம் ஊழியர்களின் உண்மைத் தன்மை, பணியாற்றிய காலம் அனைத்தையும் விசாரித்து தெரிவிப்பார்கள்.
அரசு கட்டுப்பாட்டில்
இந்த நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டாக் எக்சேஞ்ஜ் நிறுவனம்தான் நடத்தி வருகிறது. ஒரு ஊழியர் என்ன படித்தார், எங்கு வேலையில் இருந்தார் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
போலி சான்றிதழ்
ஆனால் இந்த சான்றிதழ் சரிபார்ப்பு வெங்கடாசலபதி விசயத்தில் நடைபெறவில்லை என்றே கூறப்படுகிறது. வெங்கடாசலபதி சிறையில் இருந்தபோது அவர் ஒரு நிறுவனத்தில் பணியாற்றியதாக போலி சான்றிதழ் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தப்பவிட்ட போலீஸ்
பிரவீணாவை கொலை செய்த போதே சரியான சாட்சிகளை சேகரித்து தண்டனை கொடுத்து சிறையில் அடைத்திருந்தால், அநியாயமாக வைசியாவின் உயிர் போயிருக்காது என்கின்றனர் ஐ.டி.நிறுவன ஊழியர்கள்.