தேவர் ஜெயந்தி விழா மோதல் கொலைகள்: கைதாகி ஜாமீனில் வந்தவர் வெடிகுண்டு வீசி கொலை!
மதுரை: மதுரை கோர்ட்டில் கையெழுத்திட்டு திரும்பியவர்கள் மீது குண்டு வீசியதில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு தேவர்ஜெயந்தி விழாவுக்காக சென்றுவிட்டு வேனில் திரும்பியவர்கள் மீது மதுரை சிந்தாமணி அருகே பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் விக்னேஷ், சோனையா, முனீஷ்குமார், அர்ஜுனன், முத்துவிஜயன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த வாரம் ஜாமீனில் வெளியே வந்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த இவர்கள், இன்று காலை மதுரை ஜெ.எம்.6 நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டு விட்டு டாடா சுமோ காரிலும், இரண்டு பைக்குகளிலும் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களை வழிமறித்த 20க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று அவர்கள் மீது வெடிகுண்டை வீசி தாக்கியது. அவர்கள் வந்த பைக்குகளை தீ வைத்து கொளுத்தியது. ஆனாலும் அனைவரும் தப்பியோடினர். அவர்களை விடாமல் துரத்திய மர்மக்கும்பல் சராமாரியாக வெட்டியது.
வெடிகுண்டு வீச்சில் முத்துவிஜயன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், கலெக்டர் ஆகியோர் விரைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது ஜாதி மோதலாக வெடிக்கும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அன்று நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் கடந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு சென்று திரும்பிய 3 பேரை பரமக்குடியில் சிலர் அடித்து கொன்றனர்.
மதுரை சிந்தாமணி அருகேரிங் ரோட்டில் கார் மீது கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியதில் 20 பேர் தீக்காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதில் அடுத்தடுத்து 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
இந்த வன்முறைச் சம்பவங்களை கண்டிக்கும் வகையில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல இடங்களில் அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. மதுரை- பரமக்குடியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த படுகொலை சம்பவத்திற்குக் காரணமானவர்களை பழிவாங்கும் வகையில் மீண்டும் நாட்டு வெடிகுண்டு வீசி கொலையை அரங்கேற்றியுள்ளனர்.
தொடரும் வன்முறை
மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில் பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது தொடர் நடவடிக்கையாகி வருகிறது.
இந்த ஆண்டு வன்முறைகள் நிகழாதவகையில் குருபூஜையின் போது பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டிருந்தனர். அதனால் குருபூஜை விழா அமைதியாக நடைபெற்றது. இந்தநிலையில் இப்போது கடந்த ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின் தொடர்ச்சியாக படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.