நோட்டமிட்டு கொள்ளை.. வழக்கமாக கொள்ளையடிக்கும் நகைகளை தன்ராஜிடம் விற்பேன்.. கருணாராம் பகீர்
சீர்காழி: சீர்காழியில் தன்ராஜ் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி கருணாராம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சீர்காழியில் தன்ராஜ் என்பவர் வீட்டில் நேற்று காலை அத்துமீறி நுழைந்த 3 கொள்ளையர்கள் அவரது மனைவியையும் மகனையும் படுகொலை செய்து விட்டு கட்டிலுக்கு அடியில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
கொலையாளிகள் 3 பேரும் தன்ராஜின் காரை எடுத்துக் கொண்டு தப்பினர். இந்த நிலையில் காரில் ஜிபிஎஸ் கருவி இருப்பதை கண்டறிந்த இவர்கள் காரை எருக்கூர் என்ற கிராமத்தில் விட்டுவிட்டு வயல்களில் பதுங்கியிருந்தனர்.
கொள்ளை
இவர்கள் நடமாட்டம் குறித்து சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தப்பியோடிய ஒருவரை என்கவுன்ட்டரில் சுட்டு விட்டு மற்ற இருவரை கைது செய்தனர். அந்த இருவரும் அளித்த வாக்குமூலத்தில் கொள்ளைக்கு பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்றும் அதை ஆன்லைனில் ஆர்டர் செய்ததாகவும் தெரிவித்தனர்.
விசாரணை
மேலும் இந்த கொள்ளைக்கு சதி திட்டம் தீட்டிக் கொடுத்தது கும்பகோணத்தை சேர்ந்த கருணாராம் என்றும் அவர் இறந்த திருவாரூர் முருகனின் கூட்டாளி என்றும் தெரிவித்தனர். இதையடுத்து கும்பகோணத்தில் பதுங்கியிருந்த கருணாராமை போலீஸார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
நகைகள்
அப்போது அவர் கூறுகையில் நான் கொள்ளையடிக்கும் நகைகள் தன்ராஜிடம் விற்று பணம் பெறுவேன். இதனால் எனக்கு தன்ராஜை நன்றாக தெரியும். அதுபோல் ஒரு முறை அவரது வீட்டுக்கு கொள்ளையடித்த நகைகளை விற்க சென்ற போது அவரிடம் ஏராளமான நகைகள் இருப்பதை அறிந்து கொண்டேன்.
கொள்ளை சம்பவம்
இதனால் தன்ராஜின் வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டினேன். நேற்று காலை நான், மணீஷ்பால், மணீஷ், ரமேஷ் ஆகியோர் ஒரு காரில் தன்ராஜ் வீட்டுக்கு வந்தோம். தன்ராஜிக்கு என்னை தெரியும் என்பதால் நான் உள்ளே செல்லாமல் இவர்கள் மூவரையும் மட்டும் அனுப்பிவிட்டேன்.
3 பேர் தப்பியோட்டம்
அப்போது இவர்கள் மூவரும் இருவரை கொலை செய்ததை அறிந்த நான் அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு தப்பிவிட்டேன் என்றார் கருணாராம். இவர் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதால்தான் அந்த 3 பேரும் தன்ராஜின் காரை எடுத்துக் கொண்டு தப்பி வந்தது தெரியவந்தது.