பொள்ளாச்சியில் நிலத்தகராறில் இரட்டைக் கொலை... குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
கோவை: பொள்ளாச்சியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ராஜீவ் காந்தி என்பருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை 4-வது கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்பளித்துள்ளது.
பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் சுங்கம் பகுதி தோட்டத்து வீட்டில் வசிப்பவர் முருகன், விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள், 55, இவர்களது மகள்கள் மகுடீஸ்வரி, 35, ஜோதிமணி, 30.
இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்த ராஜீவ் காந்தி, கூலித் தொழில் செய்து வந்தார். இவருக்கும் முருகன் குடும்பத்தினருக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது.
ராஜீவ்காந்தியின் இடத்தில், சுமார் இரண்டடி நிலத்தை முருகன் குடும்பத்தினர் ஆக்கிரமித்து விட்டதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் ராஜீவ்காந்தி அடிக்கடி முருகன் மற்றும் அவரது மனைவி, மகள்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு முருகனுக்கும், ராஜீவ்காந்திக்கும் இடையே மீண்டும் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனை மனதில் வைத்துக்கொண்டு பழிவாங்க நினைத்த ராஜீவ்காந்தி, முருகனின் வீட்டிற்குள் புகுந்து பழனியம்மாள், ஜோதிமணியை அரிவாளால் சராமாரியாக வெட்டினார். இருவரின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த மகுடீஸ்வரியையும் ராஜீவ்காந்தி வெட்டினார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த பழனியம்மாள், ஜோதிமணி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகுடீஸ்வரி படுகாயமடைந்தார். இது தொடர்பாக ராஜீவ்காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் கோவை 4வது கூடுதல் நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது. குற்றவாளி ராஜீவ்காந்திக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.