பிரசித்தி பெற்ற அச்சன்கோவில் மேற்கூரை புனரமைப்பு பணி... ரூ.35 லட்ச செலவில் தொடங்கியது!
அச்சன்கோவில் ஐயப்பன் கோவிலில் 35 இலட்சம் செலவில் புதிய மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியது
செங்கோட்டை: அச்சன்கோவிலில் உள்ள ஐயப்பன் கோவிலில் ரூ. 35 லட்சம் செலவில் மேற்கூரை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
அச்சன்கோவில் தர்மசாஸ்தா பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட கோயில் இது. இங்குள்ள சாஸ்தாவின் சிலை மிகப்பழமை வாய்ந்தது. இங்கே அய்யப்பன் வனராஜனாக, அமர்ந்த நிலையில் கையில் அமுதமும், கருப்பனின் காந்தமலை வாளும் ஏந்தி காட்சி அளிக்கிறார். இவருக்கு இருபுறமும் பூர்ணா, புஷ்கலை எனும் இரு தேவியர் மலர் தூவுவது போன்று காட்சி தருகின்றனர். இங்குள்ள ஐய்யப்பனை கல்யாண சாஸ்தா என்று அழைக்கின்றனர். இவரை வழிபட திருமணத்தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தமிழக பக்தர்கள் அதிகளவில் கூடுமிடங்களில் இதுவும் ஒன்று. இது நிறுவப்பட்ட ஆண்டு கொல்ல வருடம் 1106 மகரம் 12ம் நாள்.அதன்பின் இந்த ஆலயம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் திருவிதாங்கூர் மன்னரால் புனரமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் மேற்கூரை மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
இதனை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அதனைத்தொடர்ந்து 35 இலட்சம் ரூபாய் மதிப்பிட்டில் ஆலயமேற்கூரை புனரமைக்கும் பணி இன்று தொடங்கியது அதனை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிராயர் கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.