குட்கா விவகாரத்தில் சிக்கிய அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்க - தமிழிசை : வீடியோ
தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா விறபனைக்கு லஞ்சம் வாங்கிய அமைச்சர் மீதும் போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழிசை கூறியுள்ளார்.
மதுரை: குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடையை மீறி விறக லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், எம்டிஎம் குட்கா நிறுவனத்தினரிடம் இருந்து மாதம் தோறும் சம்பளம் வாங்குவது போல் லஞ்சம் வாங்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளின்போது போனஸும் கொடுக்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறையினர் எம்டிஎம் குட்கா நிறுவன உரிமையாளரின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை , ''தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ய உயர் போலீஸ் அதிகாரிகளும் அமைச்சரும் லஞ்சம் வாங்கியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் இதுகுறித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் சிறுவர்கள் சீரழிந்து போகிறார்கள். திருச்சி விமானநிலையத்தில் கூட சமீபத்தில் பலகோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழக அரசு போதைப் பொருட்கள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' எனக் கூறினார்.