எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு: அவகாசம் கொடுக்கப்பட்ட பிறகே நடவடிக்கை.. சபாநாயகர் தரப்பு வாதம்!
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் போதிய அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சபாநாயகர் தரப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் போதிய அவகாசம் கொடுக்கப்பட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சபாநாயகர் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இருவேறு தீர்ப்பு வழங்கியதால் விசாரணை மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணா முன்பு நடைபெற்று வருகிறது. இதில் சபாநாயகர் தரப்பினர் வாதிட்டு வருகின்றனர்.
இன்றைய விசாரணையின் போது, வாதிட்ட சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அரிமா சுந்தரம் 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ததில் இயற்கை நீதி மீறப்படவில்லை என்றார்.
போதிய அவகாசம் வழங்கப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தெரிவித்தார். இதனிடையே எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் தரப்பு வாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில் முதல்வர் தரப்பு வாதம் தொடங்கவுள்ளது.