அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை: ஹைகோர்ட் உத்தரவு
மதுரை: புதுப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
இப்போது தீபாவளி சீசன். தங்கள் அபிமான நடிகர் நடித்து வெளியாகும் படத்தை தீபாவளியன்றே பார்க்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கும் இளைஞர்கள் ஏராளம். அதில் இளைஞர்களுக்கு அலாதி இன்பம். இதனால் தியேட்டர்கள்முன் காலையிலேயே குவிந்து விடுவார்கள்.
ரசிகர்களின் இந்த ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு சென்னையில் 120 ரூபாய் டிக்கெட்டை 500 ரூபாய் வரைக்கும் விற்பது வழக்கம். வெளியூர்களில் 50 ரூபாய் டிக்கெட்டை 300 ரூபாய் வரை விற்கிறார்கள். இதை எதிர்த்து திருச்சியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் உயர்நீதி மன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும், கூடுதலாக வசூலித்தால் அந்ததந்த மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.