குரங்கணி தீவிபத்து- வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை: அதுல்ய மிஸ்ரா
குரங்கணி சம்பவத்தில் வனத்துறையினர் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
தேனி : தேனி மாவட்டத்தில் குரங்கணியில் சுற்றுலாப்பயணிகள் 20 பேர் காட்டுத்தீயில் சிக்கி பலியானது தொடர்பாக விசாரணை நடத்திவரும் அதிகாரி அதுல்ய மிஸ்ரா தவறு செய்தவர்கள் வனத்துறையினராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி வனப்பகுதியில் உள்ள கொழுக்குமலைக்கு சுற்றுலாப்பயணிகள் மலையேற்றப் பயிற்சிக்காக வந்தனர். இவர்களின் பயணத்திற்கு தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்து அழைத்து வந்திருந்தது.
மலையேற்றப் பயிற்சியை முடித்துவிட்டு திரும்பும் போது, காட்டுத்தீயில் அனைவரும் சிக்கினர். இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலத்த தீக்காயங்களுடன் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காட்டுத்தீ எரியும் சமயத்தில் இத்தனை பேர் காட்டுக்குள் சென்றதற்கு வனத்துறையின் அலட்சியமே காரணம் என்று பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் வருவாய்த்துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவர் தீ விபத்து நடந்த இடங்களில் விசாரணை நடத்திவருகிறார். இதனையடுத்து தீவிபத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ராவிடம் நேரில் சாட்சியம் அளித்துவருகின்றனர். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, இதுவரை மூன்று கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில் 73 பேரின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களிடன் இருந்து ஆதாரங்களும் பெறப்பட்டுள்ளன. மேலும், தீ எப்போது இருந்து எரிந்து வருகிறது என்றும் விசாரணை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை பெறப்பட்டுள்ள சாட்சியங்கள் அனைத்தையும் வீடியோ பதிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும். அடுத்தகட்டமாக, விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்து மருத்துவமனைகளில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
காட்டுத்தீ எரிந்துகொண்டிருந்த சமயத்தில் மலையேற்றப் பயிற்சிக்கு அனுமதியளித்த வனத்துறை அதிகாரிகள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.