சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு- சமூக ஆர்வலர் வளர்மதி கைது
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்த்துப் போராட்டம் நடத்திய வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
சேலம் : சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக போராடிவருபவர்களை காவல்துறை தொடர்ந்து கைது செய்து வரும் நிலையில், இன்று சமூக ஆர்வலர் வளர்மதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், பொதுமக்கள் மத்தியில் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது.
5 மாவட்டங்களின் வழியாக சென்னை வந்தடையும் இந்த 8 வழிச்சாலை திட்டத்திற்காக 8 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்தப் பாதையில் ஆறுகளும், மலைகளும் பாதிக்கப்படும் என்று மக்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.
ஆனால், விவசாயிகள் மற்றும் மக்களின் கோரிக்கையை ஏற்காத அரசு, திட்டத்தை செயல்படுத்த முனைப்புடன் தயாராகி வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இந்த திட்டத்தை எதிர்த்துப் பேசியதாக நடிகர் மன்சூர் அலிகானை காவல்துறை கைது செய்தது.
மேலும், இந்த திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வரும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷை நேற்று இரவு தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில், போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதனையடுத்து, இன்று காலை நிலம் அளவிடும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வட்டாச்சியரை முற்றுகையிட முயன்ற போராட்டத்தில் சமூக ஆர்வலர் வளர்மதியை போலீஸார் கைது செய்துள்ளனர். அடுத்தடுத்த கைதுகளால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.