தூத்துக்குடி புரட்சி: வானத்தை நோக்கி சுடாமல், இலக்கு வைத்து ஸ்னைப்பர் மூலம் சுட்டு கொலை செய்தது ஏன்?
வானத்தை நோக்கி சுடாமல் இலக்கு வைத்து தூத்துக்குடி புரட்சியாளர்களை சுட்டது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நாசகார ஆலையை மூடப் போராடிய புரட்சியில் போலீசார் அத்தனை விதிகளையும் காலில் மிதித்து எறிந்துவிட்டு எல்லை தாண்டி வரும் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து சுடுவது போல் சுட்டதுதான் ஏன் என்பது பொதுமக்களின் கேள்வி.
மரண ஓலத்தில் முத்து நகரமாம் தூத்துக்குடி துடியாய் துடிக்கிறது... ஒட்டுமொத்த உலகத் தமிழர் நிலமும் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறது.
தாய் நிலத்தில் சொந்த நாட்டு காவல்துறையால் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதைப் போல நிராயுதபாணிகளாக நீதி கேட்டு வந்த தமிழர்கள் காக்கை குருவிகளைப் போல சுட்டுத் தள்ளப்பட்டுள்ளனர் தூத்துக்குடி மண்ணில். அதுவும் பகிரங்கமாக ஊடகங்கள் படம் பிடிக்க எந்த ஒரு விதியையும் பின்பற்றாமலேயே ஸ்னைப்பர்கள் எனப்படும் கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று இலக்கு வைத்து போராட்டக்காரர்களின் மார்புகளை மட்டுமே குறிவைத்து உயிரைக் குடித்த குரூரம் எதற்காக என்பதுதான் பொதுமக்களின் கேள்வி.
மைக் அறிவிப்பும் தடியடியும்
பொதுவாக போராட்டங்களில் வன்முறை வெடிக்கலாம் என நினைத்தால் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு மைக் மூலம் போலீஸ் அறிவிப்பு செய்யும்; துப்பாக்கிச் சூடு நடத்த நேரிடும் என அறிவிக்கும். நிலைமை கட்டுக்குள் வராத நிலையில் தடியடி பிரயோகம் நடத்தும்;
இவைகளைத்தான் செய்யனும்
தடியடியும் கை கொடுக்காத நிலையில் ஆயுதங்களை பாவிப்பது போல் பாவனை காட்டும்.. இவை எதுவுமே சரிப்படாது என்கிற போது, இடுப்புக்கு கீழே ' உயிர் சேதம்' ஏற்படாத வகையில்தான் துப்பாக்கிச் சூடு நடத்தும்.. இவைதான் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள்.
உத்தரவிட்டது யாராம்?
ஆனால் தூத்துக்குடி போர்க்களத்தில் இதனை ஒன்றைக் கூட போலீசார் ஏன் பின்பற்றவில்லை? 1.5 கிலோ மீட்டர் அப்பாலுக்கு நின்றிருந்த போராட்டக்காரர்களை குறிவைத்து அதுவும் உயிர் பிழைக்கக் கூடாது என்பதற்காக ஸ்னைப்பர்கள் மூலம் வெறிபிடித்தவர்களாக கொலை செய்தது எதற்காக? இத்துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவு பிறப்பித்தது மாவட்ட ஆட்சியரா? வருவாய் அதிகாரிகளா?
|
திட்ட ஒடுக்குமுறையா?
மனிதாபிமானமே இல்லாமல் இவ்வளவு பெரிய பச்சை படுகொலை செய்தது அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறை நடவடிக்கையா? தமிழகத்தில் இனிமேல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான புரட்சி முழக்கங்கள் எழுந்துவிடவே கூடாது என்பதற்காக அரசமைப்பு இயந்திரம் இப்படி ஒரு அட்டூழியத்தை அரங்கேற்றத்தைச் சொன்னதா? மக்கள் மன்றத்தில் இத்தனை கேள்விகளுக்கும் படுகொலையாளர்கள் அத்தனை பேரும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!