வருமான வரி அலுவலகத்தில் 3வது முறையாக ஆஜரான சரத்குமார்.. வரி பாக்கியை செலுத்துவதாக ஒப்புதல்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருமான வரி அலுவலகத்தில் 3வது முறையாக வருமான வரி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
சென்னை: மூன்றாவது முறையாக வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தாம் செலுத்த வேண்டிய வரி பாக்கியை செலுத்துவதாக ஒப்புதல் அளித்துள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் வீட்டில் கடந்த ஏப்ரல் 7ம் தேதியும், அவரது மனைவி ராதிகாவிற்கு சொந்தமான ராடன் நிறுவனத்தில் கடந்த 13ம் தேதியும் வரமான வரி சோதனை நடைபெற்றது. ஏறத்தாழ 15 மணி நேரம் கொட்டிவாக்கத்தில் உள்ள சரத்குமார் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.
ராதிகா சரத்குமார் ரூ. 5 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்பட்டநிலையில் அதனை செலுத்த ராதிகா ஒப்பு கொண்டார். மேலும் வருமான வரி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சரத்குமாருக்கு சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே 2முறை சரத்குமார் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரி அலுவலகத்தில் சரத்குமார் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இன்றைய விசாரணையின் போது வரி செலுத்தியதற்கான ஆவணங்களையும் சமர்பித்தார். மேலும் செலுத்த வேண்டிய வரி பாக்கியை விரைவில் செலுத்துவதாகவும் சரத்குமார் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சரத்குமாரிடம் விசாரணை முடிந்ததது.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி அதிமுக துணை பொதுச் செயலளார் சரத்குமாருக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அடுத்த நாளே சரத்குமார் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.