எதற்காக.. யாருக்காக இந்த அவசரம்.. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.. நடிகர் ஆனந்த் ராஜ்
எதற்காக இந்த அவசரம்.. யாருக்காக இந்த அவசரம் என்று நடிகர் ஆனந்த் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை என்று சசிகலா முதல்வராக பதவி ஏற்க இருப்பது குறித்து நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து வெளியேறிய நடிகர் ஆனந்த் ராஜ், சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக எடுத்துள்ள இந்த முடிவு எதற்கு என்று தெரியவில்லை. எதற்காக இந்த அவசரம் என்றும் புரியவில்லை. யாருக்காக இந்த அவசரம் என்பது மக்களுக்கு புரியவில்லை. நல்ல ஆட்சிதானே தமிழகத்தில் நடக்கிறது. ஜனநாயகத்தில் யாரும் அரசியலுக்கு வரலாம். அதனை யாரும் தடுக்க முடியாது. ஆனால் நிதானமாக சிந்தித்து செயல்படுவது அவசியம்.
தமிழகத்தின் முதல்வரை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கே உள்ளது. காலாண்டு பரிட்சை எழுதிய மாணவர்கள் தமிழகத்தின் முதல்வர் யார் என்றால் 'அம்மா' என்று சொல்லி இருப்பார்கள். அரையாண்டு பரிட்சை எழுதிய மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டால் ஓபிஎஸ் என்று சொல்லி இருப்பார்கள். முழு ஆண்டு பரிட்சையில் தமிழக முதல்வர் யார் என்றால் இனிதான் மாணவர்கள் படிக்க வேண்டும்.
முதல்வர் பொறுப்பு மக்கள் தரும் பொறுப்பு. அதனை தானாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மறுதேர்தல் வந்து அதில் சசிகலா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்னுடைய முதல்வரும் சசிகலாதான். சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் வந்து சசிகலா தண்டிக்கப்படும் போது, மீண்டும் ஓபிஎஸ்தான் முதல்வராக பொறுப்பேர்பார்.
தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை மத்திய அரசு மிக கவனமாக கவனிக்கும் என்று நினைக்கிறேன். கவர்னர், பலம் வாய்ந்த எதிர்க்கட்சியின் செயல்தலைவராக உள்ள ஸ்டாலின் இதனை நல்ல முறையில் கையாள வேண்டும் என்றும் விரும்புகிறேன் என்று ஆனந்த் ராஜ் தெரிவித்துள்ளார்.