ஜெயலலிதாவை விட தாம் சிறந்த முதல்வர் என்கிறாரா எடப்பாடி?... ஆனந்தராஜ் ஆவேசம்
ஜெயலலிதாவை விட தாம் சிறந்த முதல்வராக திகழ்வதாக கூறுகிறாரா எடப்பாடி பழனிச்சாமி என்று நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.
சென்னை: நிறைய கோப்புகளில் கையெழுத்திட்டதால் தான் ஜெயலலிதாவைவிட சிறந்த முதல்வராக திகழ்கிறேன் என்று எடப்பாடி கூறுகிறாரா? என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார்.
தமிழகத்தில் அரசு செயல்படாத அரசாக உள்ளது என்று மாற்று அணியினரும், எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டின. ஆனால்கடந்த ஒன்றரை மாதங்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்திட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை ஆனந்தராஜ் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஒன்றரை மாதங்களில் 1,570 கோப்புகளில் கையெழுத்து போட்டதாக கூறுகிறாரே. இது சாத்தியமா?
இவ்வாறு கூறுவதன் மூலம் தான் ஜெயலலிதாவை விட சிறந்த முதல்வர் என்று கூறுகிறாரா? கோப்புகளை படித்து பார்த்தாரா? இல்லை நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்திட்டாரா?
எடப்பாடி ஆட்சி பொறுப்பேற்ற 3 முதல் 6 மாதங்களுக்குள் டாஸ்மாக் கடைகளை ஒழிப்பேன் என்றார். ஆனால் அதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்கவில்லையே. மக்கள் குடிநீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர். இதை போக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.