"டாக்டர் அனிதா மருத்துவமனை"- இதை தமிழக அரசு குழுமூரில் தொடங்க வேண்டும்- நடிகர் ஆனந்தராஜ்
அனிதா பெயரில் அவரது கிராமத்தில் மருத்துவமனையை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: மாணவி அனிதா பெயரில் அவரது சொந்த கிராமமான குழுமூரில் தமிழக அரசு மருத்துவமனையை தொடங்க வேண்டும் என்று நடிகர் ஆனந்தராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதிம மதிப்பெண் எடுத்தும் மருத்துவ கனவு கைகூடாததால் மனவிரக்தியடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு மாநிலம் முழுவதும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
இந்நிலையில் அனிதாவுக்கு அறிவித்த நிதியுதவியையும் அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். மேலும் நீட் தேர்வில் நல்ல முடிவை எடுத்த பிறகு வாங்கி கொள்வதாகவு்ம தெரிவித்தனர்.
அறுவை சிகிக்சை
இதுகுறித்து நடிகர் ஆனந்தராஜ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அனிதா இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். டாக்டராகி செய்யும் அறுவை சிகிச்சை தன் இறப்பின் மூலம் ஆட்சியாளர்களுக்கு செய்து விட்டார்.
பேராதரவு
தமிழக அரசின் நிதியுதவியை வேண்டாம் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்து விட்டதால் அவர்களுக்கு மக்கள் பேராதரவு உள்ளது.அந்த குடும்பத்துக்கு தேவை நிதியல்ல, நீதி. நான் இத்தனை நாள்கள் உங்களுடன் பயணித்தேன் ென்ற முறையில் கேட்கிறேன்.
டாக்டர் அனிதா
அந்த மாணவியின் சொந்த கிராமத்தில் ஒரு ஓலை குடிசையிலாவது டாக்டர் அனிதா மருத்துவமனை என்பதை தமிழக அரசு தொடங்க வேண்டும். அப்போதுதான் பாவவிமோசனம் கிடைக்கும். மாணவர்கள் போராட்டம் வலுத்து வரும் நிலையில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தமிழக ஆட்சியாளர்கள் வாய்மூடி இருந்து வருகின்றனர். இதுஎப்படி உள்ளது தெரியுமா, மாணவனை பலமுறை ஆசிரியர் அடித்தாலும் அந்த மாணவர் சிரிக்கும்போது ஆசிரியருக்கு கோபம் வரும். அதுபோல் மக்கள் இத்தனை போராட்டம் நடத்தியும் வாய் திறக்காமல் இருப்பதால் அந்த கோபம் அதிகரித்து வருகிறது.
வாட் வரிக்கு எதிர்ப்பு
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வாட் வரியை தான் ஆட்சி செய்த வரை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுத்து வந்தவர் ஜெயலலிதா. அவர்கள் வழியில் வந்ததாக கூறி கொள்பவர்கள் எதற்காக மத்திய அரசுக்கு அடிபணிய வேண்டும்?
ராஜினாமா செய்ய வேண்டும்
எங்கோ இரவில் இரு ரயில் விபத்துகள் நடந்ததற்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சராக இருந்து சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இங்கு ஒரு உயிர் போயுள்ளது, அதற்கு பொறுப்பேற்று சுகாதார துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்.
துரும்பும் கிள்ளவில்லை
இங்கு ஒரு துரும்பையும் ஆட்சியாளர்கள் கிள்ளிபோட வில்லை. விஜயபாஸ்கரை தகுதிநீக்கம் செய்யும் தகுதி தன்னிடம் இல்லை என்று சொல்வாரேயானால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் ஆனந்தராஜ்.