ஜல்லிக்கட்டை நடத்த.. பீட்டா காலில் விழச் சொல்கிறார் நடிகர் ஆனந்தராஜ்!
சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழலாம் என்பது போல் விலங்கின ஆர்வலர்களிடமே கேட்டு ஜல்லிக்கட்டை நடத்திவிடலாம் என்கிறார் நடிகர் ஆனந்த்ராஜ்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று வழக்கு போட்டுள்ள விலங்கின ஆர்வலர் அமைப்பான பீட்டாவிடமே வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு நாம் அனைவருமே விருப்பு வெறுப்பின்றி பேசி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நடிகர் ஆனந்த்ராஜ் யோசனை கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ஆனந்த்ராஜ் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் பேரணி நடத்தி இருப்பது நல்ல தொடக்கமாகவே பார்க்கிறேன். இளைஞர் சமுதாயம் நினைத்தால் எதனையும் மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்தப் போராட்டம் நடத்த வேண்டிய நல்ல நேரம் இது. ஜல்லிக்கட்டு நம் ரத்தத்தோடு கலந்த ஒரு வீர விளையாட்டு. விவசாயிகளுடைய பாரம்பரிய விளையாட்டும் கூட.
இது விளையாட்டுதானே தவிர, ஜல்லிக்கட்டில் துன்புறுத்தல் என்பது குறைவுதான். இளைஞர்கள் மிக முக்கியமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் போராட்டம் வீணாகாது. ஜல்லிக்கட்டுப் பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது என்று நாம் அப்படியே விட்டுவிட முடியாது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள விலங்கு ஆர்வலர்கள் அமைப்பான பீட்டாவிடமே நாம் எல்லோரும் சேர்ந்து இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்க வேண்டும். ஏனென்றால் இந்த பிரச்சனையை நாம் சட்டப்படி அணுக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கு நீண்ட காலம் எடுப்பதால் பீட்டாவிடமே நாம் கேட்பது தவறில்லை.
அதே போன்று வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. பயிர்கள் கருகிய நிலையில் இருப்பதைப் பார்த்து தாங்க முடியாத மன நிலை உள்ளவர்களை தயவு செய்து உறவினர்கள் வயலுக்கு அனுப்பாதீர்கள். குழந்தைப் போல் பயிர்களை வளர்த்தவர்கள், அது காயும் போது தாங்கிக் கொள்ள முடியாமல் போய்விடுகிறது. விவசாயிகளின் தற்கொலை தடுக்க வேண்டும் என்று ஆனந்த்ராஜ் கூறினார்.