காவிரியை விட எதுவுமே முக்கியமில்லை.. நடிகர் சங்கக் கூட்டத்தில் கொந்தளித்த டிஸ்கோ சாந்தி தம்பி
சென்னை: சென்னையில் இன்று நடந்த நடிகர் சங்கக் கூட்டத்தில் காவிரிப் பிரச்சினை தொடர்பாக நாம் என்ன செய்ய முடியும் என்று முக்கிய நிர்வாகிககள் கேட்டபோது அதற்கு கோபம் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளிநடப்புச் செய்துள்ளார் நடிகை டிஸ்கோ சாந்தியின் தம்பியும், நடிகருமான அருண்மொழி வர்மன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் கூடியது. இதில் கர்நாடக விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகை டிஸ்கோ சாந்தியின் தம்பியும், நடிகருமான அருண்மொழி வர்மன் சங்க நிர்வாகிகளிடம் ஒரு கடிதத்தினை கொடுத்தார்.
கடிதத்தைக் கொடுத்த அவர் சென்னையில் 18ம் தேதி செலிபிரிட்டி பேட்மிட்டன் லீக் போட்டி நடக்கிறது. இதில் கன்னட நடிகர்களும் கலந்து கொள்கின்றனர். தற்போது காவிரி பிரச்சனைக்காக தமிழக விவசாயிகள் போராடும் நிலையில் அவர்கள் இங்கு வந்தால் பிரச்சனை வரலாம். நமக்கும் உணர்வு இல்லை என்று சொல்லுவார்கள். ஆகையால் இந்த போட்டியை தள்ளி வைக்க வேண்டும். காவிரி பிரச்சனையை விட இந்த போட்டி ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது என்று கூறினார்.
அதற்கு சங்க நிர்வாகிகள், நாம் என்ன செய்ய முடியும் என்று கேட்டுள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த அருண்மொழி வர்மன், என்ன சொல்றீங்க, தமிழக வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர். தமிழர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். தமிழக இளைஞர் ஒருவரை தாக்கியுள்ளனர். உணர்வுப்பூர்வமாக நாம் இந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி விட்டு கூட்டத்தை விட்டு வெளியேறி விட்டார்.
நடிகர் அருண்மொழி வர்மன் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.