தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வழங்கிய லாரன்ஸ்!
ஈரோடு மாவட்டத்தில் தமிழகத்தில் நிலவும் வறட்சியின் காரணமாகத் தற்கொலை செய்து மரணமடைந்த விவசாயிகளுக்கு நிதியுதவியும் கறவை மாடுகளும் வழங்கினார் நடிகரும் நடன இயக்குநருமான லாரன்ஸ்.
ஈரோடு: தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவுகிறது. அதனால், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்துகொண்டும் 250 விவசாயிகளுக்கு மேல் மரணமடைந்துள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு நடிகர், நடன இயக்குநர் ராகவா லாரன்ஸ் கறவை மாடுகள் கொடுத்து உதவி செய்துள்ளார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவுக்கு விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். இதில் நடிகரும் நடன இயக்குநருமான லாரன்ஸ் கலந்துகொண்டார். அவர் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து மரணமடைந்த 25 விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிதி உதவி மற்றும் தலா 2 கறவை மாடுகள் வழங்கினார்.
அவ்விழாவில் லாரன்ஸ் பேசியதாவது: ''நான் முதல் தெய்வமாக நினைப்பது எனது அம்மாவத்தான். என் இரண்டாவது தெய்வம் என் ரசிகர்கள். மூன்றாவது நான் தெய்வமாக நினைப்பது விவசாயிகளைத்தான்.
விவசாயிகள் பல லட்சம் வங்கிகளில் கடன் வாங்கியிருப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் சிலரிடம் கேட்டபோதுதான் தெரிந்தது, அவர்கள் வெறும் 40,000 ரூபாய், 50,000 ரூபாய் என்ற அளவில் தான் கடன் வாங்கியுள்ளனர். அதனைக் கட்ட முடியாமல் பலர் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
அவர்களின் கடனை நானே ஏன் அடைக்கக் கூடாது என்று யோசித்தேன். அதன் விளைவாக, முதல்கட்டமாக இருவருக்கு அவர்கள் அடகு வைத்திருந்த தாலிக்கொடியை மீட்டுக் கொடுத்தேன்.
என்னோடு ரசிகர்கள், பொதுமக்களும் விவசாயிகளுக்கு உதவ முன்வரலாம். நீங்கள் தலா ரூ.1 கொடுத்து உதவினாலும் போதும். இனிமேல் தமிழகத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து சாகக்கூடாது. சாக விடமாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன்.
இந்தப் பணம் எல்லாம் என் ரசிகர் எனக்குக் கொடுத்தது. முதன்முதலில், 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தின் வருவாயில் ஒரு கோடி ரூபாயை இளைஞர்களுக்கு உதவி செய்தேன். என் அடுத்த படமான 'சிவலிங்கா' மூலம் கிடைக்கும் வருமானத்தை விவசாயிகளுக்குக் கொடுக்க உள்ளேன்.
நான் தலைவனாக விரும்பவில்லை. தொண்டனாக மக்களுக்கு நீண்ட நாள் சேவை செய்யவே விரும்புகின்றேன். இதை என் குடும்பத்தாரும் புரிந்துகொண்டுள்ளனர்''. இவ்வாறு லாரன்ஸ் கூறினார்.