சமூக நலன் கருதி திரைப்படங்களில் வன்முறையை தவிர்க்க வேண்டும்... சரத்குமார் அட்வைஸ்!
சென்னை: சமூக நலன் கருதி சினிமாவில் வன்முறையை தவிர்க்கலாம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள், காதல் சார்ந்த குற்றங்களுக்கு திரைப்படங்களே காரணம் என்று குற்றம்சாட்டப்படுவதால் சமூக நலன் கருதி திரைத்துறையினர் இந்த மாற்றத்தை கொண்டு வரலாம் என்று சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருதலைக்காதலால் பெண்களைக் கொல்வது, பள்ளி மாணவர்களுக்கு காதல் ஆசைகளைத் தூண்டுவது உள்ளிட்டவற்றிற்கு முக்கிய காரணம் திரைப்படங்களே என்று பலகாலங்களாக திரைப்படங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. மதுரையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி காதலை ஏற்க மறுத்ததால் அவர் மீது பெட்ரோலை ஊற்றி இளைஞர் ஒருவர் எரித்தார்.
இதனால் உடல் எரிந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி ஒரு வார போராட்டத்திற்கு பின்னர் நேற்று உயிரிழந்தார். வழிப்பறி, கொலை, காதல், வன்கொடுமைகள், காதல் சார்ந்த குற்றங்களுக்கு வழிவகுப்பதில் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் திரைப்படங்களில் வன்முறை காட்சிகளை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சமூக நலன் கருதி, திரைத்துறையினர் முடிந்தவரை வன்முறை சார்ந்த காட்சிகளைத் திரைப்படங்களில் காண்பிப்பதைத் தவிர்க்க வேண்டும். சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கும் திரைப்படங்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் சமூக அக்கறையுடன் இதனை செய்ய திரைத்துறையினர் முன் வரவேண்டும் என்றும் சரத்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.