நடிகர் தனுஷ் பிப்., 28ல் நேரில் ஆஜராக ஹைகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு
நடிகர் தனுஷ் பிப்ரவரி 28ஆம் தேதி நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனுஷ் தங்கள் மகன் என்று மேலூரைச் சேர்ந்த தம்பதிகள் தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை: நடிகர் தனுஷ் தங்கள் மகன் ஏன் கதிரேசன்-மீனாட்சி தம்பதி மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தனுஷ் தன் மகன் என்பதற்கான ஆவணமாக பள்ளிச்சான்றிதழை கதிரேசன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். இவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனுஷ் பிப்ரவரி 28ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், 60, இவரது மனைவி மீனாட்சி ,55. இவர்கள் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கொண்டாடி வருகின்றனர். தங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது நடிகர் தனுஷின் கல்விச் சான்றிதழ்களை தனுஷ் தரப்பிலும், அவரை மகனாக உரிமை கோரும் கதிரேசன் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தனுஷின் பத்தாவது வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்படவில்லை. கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்த பள்ளி மாற்றுச் சான்றிதழில் அங்க மச்ச அடையாளங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப்பின் இந்த வழக்கில் எதிர்மனுதாரரான கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பள்ளி மாற்றுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அங்க மச்ச அடையாளங்கள் நடிகர் தனுஷின் உடலில் உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டியதுள்ளது. இதனால் நடிகர் தனுஷ் பிப்ரவரி 28ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
நீதிமன்ற உத்தரவினை ஏற்று தனுஷ் ஆஜராவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.