நடிகர் கார்த்திக் கட்சிக்கு 'பேரிழப்பு'.. மகன் கவுதமே கைவிட்ட பரிதாபம்!
சென்னை: சேலத்தில் நேற்று நடைபெற்ற 'இவன் தந்திரன்' திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்திக்கின் மகனான கவுதம் கார்த்திக் பங்கேற்றார். ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கவுதம் பேசுகையில், 30ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. இன்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை தான் இந்த படம். ஆர்.ஜே.பாலாஜியும் படத்தில் நடித்துள்ளார். காதல், காமெடி என எல்லோரும் பார்க்கும்படியாக படம் இருக்கும்.
மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் இந்த படம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கும் என்று கவுதம் கார்த்திக் தெரிவித்தார். பிறகு நிருபர்கள் கேள்வி அப்படியே அரசியல் பக்கம் போனது.
ரஜினி
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து, கருத்து கூற விரும்பவில்லை. நான் இப்போது தான் திரைத்துறையில் படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். 10 ஆண்டுகள் சென்ற பின்பு அரசியல் குறித்த கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பேன் என்று கவுதம் கார்த்திக் தெரிவித்தார்.
தந்தைக்கு ஆதரவு இல்லை
இதைவிட முக்கியமாக, தனது தந்தை ஒரு அரசியல்வாதியாக இருந்தால்கூட அவரின் அரசியலுக்கு கூட தான், ஆதரவு தெரிவிக்கமாட்டேன் என கூறினார் கவுதம்.
திருட்டு சிடி
பாகுபலி போன்ற தரமான படங்கள் வரும் போது பொதுமக்கள் தியேட்டரை நோக்கி வருவார்கள். தரமான படங்கள் தான் மக்களை ரசிக்க வைக்கும் என திருட்டு விசிடி குறித்த கேள்விக்கு பதிலளித்தார் கவுதம் கார்த்திக்.
ஆதரவு கொடுத்தாலும்..
ஒரு காலத்தில் நவரச நாயகன் என அழைக்கப்பட்டு, இளம் தலைமுறை நடிகர்களுக்கே சவால்விட்ட கார்த்திக், திரைப்படங்களில் வாய்ப்பு கிடைப்பது குறைந்த பிறகு, நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை ஆரம்பித்தார். இது கருணாஸின் கட்சி போல ஜாதி கட்சியாக அடையாளம் காணப்பட்டது. ஆனால் கருணாஸ் பெற்ற வெற்றியை கூட கார்த்திக்கால் பெற முடியவில்லை. அவர் கட்சி நடத்துகிறார் என்பதே மக்களில் பலருக்கு தெரியாது. கவுதம் கார்த்திக்கும் இதுவரை சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் கார்த்திக்கிற்கு ஆதரவு இல்லை என கவுதம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.