எங்களிடம் மடியேந்தி பிச்சை கேட்பதாக சொன்ன சுஷ்மா சுவராஜ்.. கமல் முன்னிலையில் மீனவர்கள் ஆதங்கம்
Recommended Video
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நடிகர் கமல்ஹாசன் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மீனவ பிரதிநிதிகள் அவரை சந்தித்தனர். மீனவர் கோரிக்கையை கமல் கேட்கவில்லை என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை குறிப்பிட்ட கமல், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதை நிரூபிக்க மீனவர்கள் உங்கள் முன்னிலையிலேயே என்னை சந்திக்க வந்துள்ளனர் என்று தெரிவித்தார்.
அப்போது போஸ் என்ற மீனவர் கூறுகையில், எங்களை அனைத்து அரசுகளுமே புறக்கணித்துவிட்டன. எந்த நாட்டிலும் இல்லாத வகையிலான சட்ட திட்டங்களை இலங்கை அரசு விதித்து, தமிழக மீனவர்களை ஒடுக்குகிறது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. எனவே கமல் எங்களுக்கு நல்லது செய்வார் என்று நம்புகிறோம்.
கடலில் தத்தளிக்கும் மீனவருக்கு ஒரு கட்டையை போல, கமல் உதவுவார் என்று எதிர்பார்க்கிறேன். தேர்தலுக்கு முன்பாக சுஷ்மா சுவராஜ் எங்களது பிரச்சினைகளை தீர்ப்பதாக வாக்களித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, டெல்லியில் அவரை சந்திக்க சென்றபோது, மடியேந்தி பிச்சை கேட்கிறேன், இலங்கை எல்லையில் மீன்பிடிக்காதீர் என்று எங்களிடம் கூறினார் சுஷ்மா சுவராஜ்.