கட்சி தொடங்குவது உறுதி-நான்தான் முதல்வர் என்பது இல்லை... யாருக்கும் வாய்ப்பு கிடைக்கும்: கமல்ஹாசன்
தான் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தால் நான்தான் முதல்வர் என்பதில்லை. ஊழல் கரை படியாத யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார்.
சென்னை: தான் அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலை சந்தித்தால் நான்தான் முதல்வர் என்பதில்லை. ஊழல் கரை படியாத யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம் என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்தார்.
நியூஸ் 18 தமிழ் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரனுக்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:
நான் அரசியலில் எப்போது ஈடுபடுவேன் என்பது குறித்து ஊடகங்கள்தான் தேதி குறித்து வருகின்றன. நான் இன்னும் குறிக்கவில்லை.தலைப்புச் செய்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தேதி கேட்கின்றனர்.
அதற்கு பயந்தோ அல்லது இணங்கியோ என்னால் தேதி குறிப்பிட முடியாது. செல்லும் பாதை முக்கியமான ஒரு பயணம். அதற்கான திட்டங்களும், முன்னேற்பாடுகளும் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள், நண்பர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே தெரிவிக்க முடியும்.
அள்ளி தெளிக்க முடியாது
கொள்கைகள் என்ன என்பதை சரியாக வகுத்து சொல்லாமல் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்துவிட்டு பிறகு திருத்தங்களை செய்ய முடியாது. அரசியலுக்கு நான் வந்துவிட்டேன். என்னுடைய கட்சி மக்களுக்கானது என்பதில் சந்தேகமே இல்லை. மக்கள் நலன், மக்கள் உரிமை, மக்கள் ஒற்றுமைக்கான கட்சியாக இருக்கும். ஜாதிய விளையாட்டுகளை நொறுக்கித் தள்ள உள்ளேன்.
எம்ஜிஆரின் புத்தகத்திலும்...
எம்ஜிஆரின் புத்தகத்தில் இருந்தும் சில கருத்துகளை எடுத்துக் கொள்கிறேன். இவர்கள் எல்லாம் அரசியல் அறிவு. எனக்கு பயன்பட வேண்டும். அதை நான் பயன்படுத்தி கொள்கிறேன். அதற்காக அந்த கட்சியில் சேருவது என்று அர்த்தம் இல்லை.
ரஜினியிடம் கூறினேன்
ரஜினியிடம் அரசியலுக்கு வருவது குறித்து எப்போதோ கூறிவிட்டேன். எப்போது இந்த முடிவை எடுத்தீர்கள் என்று அவர் கேட்டார். நான் எப்போதோ எடுத்துவிட்டேன் என்று கூறினேன். ஆனால் அவங்க (ஜெயலலிதா) இருக்கும் போது அரசியல் குறித்து முடிவு எடுக்கவில்லையே. இப்போது ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்று ரஜினி கேட்கவில்லை. ஏனெனில் அவருக்கு தெரியும் அவங்க இருந்த போதும் பேசியிருக்கேன், ரஜினியும் குரல் கொடுத்திருக்கார்.
தேவையில்லை என நினைத்தோம்
அப்போது தேவையில்லை என நினைத்தோம். ஆனால் இப்போதுள்ள நிலைமை மோசமாக இருப்பதால், கால் ஊன்ற நினைக்கிறோம். பகுத்தறிவு என்பது எல்லா கோயில்களையும் இடித்து தள்ள வேண்டும் என்பதல்ல. எல்லாவற்றையும் பகுத்து அறிய வேண்டும் என்பது.
கருப்பு என்பது திமிரின் அடையாளம்
கருப்பு நிறம் என்பது எதையும் பிரதிபலிக்காது. என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. இன்னும் சொல்லபோனால் கருப்பு என்பது திமிரின் அடையாளம். போராட்டத்தின்போது எதிர்ப்பை வெளிப்படுத்த பயன்படுத்தப்படுவது கருப்புதான் நான் வலது பக்கமும் போக மாட்டேன். இடது பக்கமும் போகமாட்டேன். நடுவில்தான் நிற்பேன். எக்ஸ்டீரிம் ரைட்டும் சரி எக்ஸ்டீரீம் லெப்டும் சரி இரண்டுக்கும் போனாலும் விளைவுகள் ஒன்றுதான். சித்தாந்தங்கள் வேறுவேறாக இருக்கலாம். இரண்டுக்கும் நடுவில் மக்களுடன் இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்.
பாஜகவுக்கு எதிரான விமர்சனம்
தமிழக அரசியலை குறை கூறும் நான் இந்திய அரசியலை பற்றி கவலைப்படுவதில்லை என்று கேட்கிறீர்கள். நான் ஒரு தமிழர். முதலில் என் வீட்டு முன்னால் உள்ள குப்பைகளை அள்ள வேண்டும். பிறகு, எனது தெரு, எனது பகுதி, எனது ஊர், எனது மாநிலம் என படிப்படியாக எனது நாடு வரை செல்லலாம். பாஜகவால் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பை எனக்கு தெரிந்த பொருளாதாரம் மூலம் பாராட்டினேன்.
மக்கள் அவதி
ஆனால் அந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அவதிப்பட்டதை ஒப்பு கொள்கிறேன். முதலில் தமிழகத்தை சரிசெய்துவிட்டு பிறகு இந்திய அரசியலுக்கு போகலாம். அரசியல் கட்சியை தொடங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. கொள்கைகளும் ,திட்டங்களும் வகுக்கப்பட்டு வருகின்றன. சமையல் செய்யும்போதே எப்படி பரிமாற கூடாதோ அதுபோல் திட்டங்களை வகுக்கும்போதே அதுகுறித்து பேசக் கூடாது.
யாருக்கு போட்டி
நான் அரசியலுக்கு வந்தவுடன் மக்கள் நலம் கருதாதவர்களை போட்டியாளர்களாக கருதுவேன். களத்தில் இருந்தாலே வெற்றிதான். திமுக ஆட்சிக்கு வந்தபோது நான் எந்த கட்சி குறித்தும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் ஊழல் நிறைந்த ஆட்சியாக இருந்தால் எந்த கட்சியாக இருந்தாலும் காட்டமான விமர்சனத்தை முன்வைப்பேன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
உடன் நடக்க வேண்டும்
என்னை யாரும் பின்னாலிருந்து இயக்கவில்லை. சிலர் இயக்குவதால் நான் முன்னே செல்லவும் வில்லை. நான் ஓடுகிறேன், என் பின்னால் ஓடிவாருங்கள் என்று நான் கூறவில்லை. உங்களுடன் நானும் இணைந்து நடக்கிறேன் என்று கூறுகிறேன். ஜெயலலிதா மரணத்தில் எல்லாரும் சந்தேகப்படும்போது நானும் சந்தேகப்படுகிறேன். ஜெயலலிதா மரணம் குறித்து புலன் விசாரணை நடத்தினால் உண்மை தெரியவரும். அதுவரை யூகங்கள் கூடாது. முதல்வர் என்றில்லை மரணமடைந்தது சாதாரண பெண்ணாக இருந்தாலும் அவர் இறப்புக்கு யூகங்கள் கூறினால் அதில் சர்ச்சைகள் ஏற்படும்.
முட்கீரிடம்
அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. 100 நாள்களில் தேர்தல் வந்தால் சந்தித்து நான் முதல்வராவேன் என்று சொல்லவில்லை. நான் கட்சி தொடங்குவதாலேயே முதல்வர் ஆவேன் என்பதில்லை. யாரை வேண்டுமானாலும் முதல்வராக்குவேன். ஊழலற்ற ஆட்சி நடைபெற பாதை வகுத்துவிட்டு சென்றுவிடுவேன். எனவே நான் முதல்வர் அல்ல. தவறு செய்பவர்களை முள்கிரீடம் குத்தி கிழிக்கும். முள்கிரீடம் என்று சொன்னதன் பொருள் பொறுப்பு என்பதாகும்.
ஊழலை ஒழிக்க வேண்டும்
ஊழல் என்பது போக்குவரத்து நெரிசல் மாதிரி. அதை சரி செய்தால்தான் என்னுடைய பிரயாணம் நல்லபடியாக இருக்கும். அதன்பிறகு எந்தெந்த ஊருக்கு செல்லலாம் என்பதை முடிவு செய்து விடலாம். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.