பெரியார் என்னெல்லாம் சொன்னாரோ, அதையெல்லாம் செய்தவர் கருணாநிதி.. கார்த்தி புகழாரம்
கருணாநிதி சமாதியில் நடிகர் கார்த்தி அஞ்சலி செலுத்தினார்.
Recommended Video
சென்னை: பெரியார் என்னெல்லாம் சொன்னாரோ, அதையெல்லாவற்றையும் தனது ஆட்சியில் செய்து காட்டிய கருணாநிதி என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை அடக்கம் செய்து 3 நாள் ஆகிறது. ஆனாலும் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த தொண்டர்களும், பொதுமக்களும், பிரபலங்களும் குவிந்து வருகிறார்கள். தங்களுக்கு மனதில் தங்கிவிட்ட மூத்த தலைவரை மறக்க முடியாமல், அவரை தேடி மெரினாவில் தொடர்ந்து படையெடுத்து வருகிறார்கள் தமிழ் உள்ளங்கள்.
இதில் திரைப்பிரபலங்கள், கருணாநிதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாலும், மீண்டும் மெரினா சென்று தங்கள் கண்ணீர் வணக்கங்களை தெரிவித்து விட்டு வருகின்றனர். நேற்றுகூட த்ரிஷா சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார்.
அதன்படி, இன்று நடிகர் கார்த்தி மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து துக்கம் விசாரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தந்தை பெரியார் என்னவெல்லாம் சொன்னாரோ, அவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
சின்ன சின்ன கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையைதான் காட்டுகிறது என்று தெரிவித்த கார்த்தி, இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கருணாநிதியால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள் என்றார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்த கருணாநிதியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று என்று கார்த்தி கூறினார்.