ஜனவரியில் நட்சத்திர கிரிக்கெட்... நடிகர்கள் ரஜினி, கமலிடம் ஒப்புதல்... நடிகர் கார்த்தி தகவல்
வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று நடிகர் கார்த்தி அறிவித்தார்.
சென்னை : வரும் ஜனவரி மாதம் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில், மூத்த மற்றும் முன்னணி திரைப்பட , நாடக நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடிகர் கார்த்தி பேசுகையில், வரும் ஜனவரியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும். இதற்காக நடிகர்கள் கமல், ரஜினியிடம் ஒப்புதல் பெற்று விட்டோம். அறங்காவல் குழுவிடம் ஒப்புதல் பெறப்படும்.
உறுப்பினர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீடு செய்ய முடியவில்லை.
ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியை காட்டிலும் செலவு அதிகமாகும் என்றார் கார்த்தி. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக, நடிகர் சங்கத்தின் வேண்டுகோள் படி இன்று சினிமா படப் பிடிப்புகள் ரத்து செய்து, விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.