மக்களே... கவனிங்க.. முழு நேர அரசியல்வாதியாகப் போகிறாராம் கார்த்திக்!
சென்னை: நடிகர் கார்த்திக் செம வித்தியாசமானவர். சிறப்பான நடிப்புக்குப் பெயர் போன அவர், அரசியலில்தான் பெரியஅளவில் சறுக்கி விட்டார். ஆனாலும் மனிதர் அரசியலை விடுவதாக இல்லை. முழு நேர அரசியல்வாதியாகப் போவதாக தற்போது அறிவித்துள்ளார்.
தேர்தலின்போது மட்டுமே தீவிர அரசியல்வாதியாக வலம் வரும் வழக்கம் உடையவர் கார்த்திக். அதுவும் கூட திடீரென வருவார், திடீரென காணாமல் போய் விடுவார். வேட்பாளர்களை அறிவிப்பார். அவர்களை யாராவது கடத்தி விடுவார்கள். அத்தோடு காணாமல் போய் விடும் கார்த்திக்கின் அரசியல்.
இதுதொடர்கதையாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாக அறிவித்துள்ளார் கார்த்திக். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் கார்த்திக். அப்போது இதைத் தெரிவித்தார். அவரது பேட்டியிலிருந்து சில துளிகள்:
பார்ட் டைம் அரசியல்
நான் இதுவரை முழு நேர அரசியல்வாதியாக இருந்ததில்லை. பார்ட் டைம் அரசியல்வாதியாகவே இருந்துள்ளேன். அதிலும் சமீபத்தில் அரசியலை விட்டு விலகி நிற்கிறேன்.
ரஜினி கமலும் பார்ட் டைம்தான்
நான் மட்டும் இல்லை, ரஜினி, கமல் கூட பார்ட் டைம் அரசியல்தான் செய்து வருகின்றனர். அவர்களும் முழு நேர அரசியல்வாதியாக வேண்டும். நானும் விரைவில் முழு நேர அரசியல்வாதியாக என்னைப் பார்க்கலாம். எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
அனைவரும் புல் டைம் ஆவோம்
நான் மட்டுமல்ல, ரஜினி,கமலும் கூட சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு முழு நேர அரசியல் செய்ய முன்வர வேண்டும் என்றார் கார்த்திக். சரணாலயம் என்ற அமைப்பை நடத்தி வந்தவர் கார்த்திக். அப்போது அவருக்குக் கூடிய கூட்டத்தைப் பார்த்து தமிழகமே ஆச்சரியப்பட்டது.
அரசியலில் குழப்பம்
இதையடுத்து அவர் பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்தார். ஆனால் அங்கு சரிவர செயல்படவில்லை. இதனால் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். தனிக் கட்சி கண்டார். அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வந்த அவர் அதையும் சரியாக நடத்தவில்லை.
தெளிவாக இருப்பாரா
இந்த நிலையில்தான் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறப் போவதாக கார்த்திக் கூறியுள்ளார். இந்த முறையாவது சீரியஸாக அவர் அரசியலில் ஈடுபடுவாரா அல்லது மறுபடியும் குழப்புவாரா என்பதை போகப் போகத்தான் பார்க்க வேண்டும்.